உளுந்தூர்பேட்டை அருகே, வீட்டின் பூட்டை உடைத்து 8½ பவுன் நகை கொள்ளை - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
உளுந்தூர்பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8½ பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சிறுத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் அகஸ்டின். இவருடைய மனைவி அன்புமேரி (வயது 30). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு புதுச்சேரியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து மீண்டும் தனது வீட்டுக்கு சென்றார். அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அன்புமேரி உடனே வீட்டுக்குள் சென்றுபார்த்தார்.
அப்போது அங்குள்ள ஒரு அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 8½ பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. இது குறித்த தகவலின் பேரில் திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அன்புமேரி வீட்டில் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், அவரது வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. கொள்ளை போன நகையின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story