மாவட்டம் முழுவதும் 5.17 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு அமைச்சர் தகவல்


மாவட்டம் முழுவதும் 5.17 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 5 Jan 2020 10:45 PM GMT (Updated: 5 Jan 2020 9:40 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு 5 லட்சத்து 17 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட இருப்பதாக அமைச்சர் தங்கமணி கூறினார்.

நாமக்கல்,

நாமக்கல் ராமாபுரம்புதூரில் நேற்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கினார். கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கரும்பு, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் பரிசு பொருட்களுடன் 1000 ரூபாய் ரொக்கமும் சேர்த்து 25 பயனாளிகளுக்கு வழங்கினர். விழாவில் அமைச்சர் தங்கமணி பேசும்போது கூறியதாவது :-

நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு மொத்தம் உள்ள 5 லட்சத்து 7 ஆயிரத்து 415 குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதேபோல் 3 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு இலவச வேட்டி, சேலையும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு வருகிற 9-ந் தேதி முதல் அந்தந்த ரே‌‌ஷன்கடைகளில் வழங்கப்படும். பொதுமக்கள் முன்னதாக சென்றால் தான் கிடைக்கும் என எண்ணி ரே‌‌ஷன்கடைகளில் வரிசையில் காத்திருக்க வேண்டாம். அனைவருக்கும் படிப்படியாக வழங்கப்படும்.

புதிய குடிநீர் திட்டம்

இந்த அரசு பொதுமக்களை தேடி சென்று மனுக்களை பெற்று குறைகளை நிவர்த்தி செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது வழங்கப்படும் மனுக்களுக்கும் ஒரே மாதத்தில் தீர்வு காணப்படும். வளர்ச்சி திட்டங்களை பொறுத்த வரையில் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். மண் சாலைகளே இல்லாத மாவட்டமாக இந்த மாவட்டம் மாற்றப்பட்டு உள்ளது.

நாமக்கல் நகராட்சியுடன் 9 ஊராட்சிகளை இணைத்ததால் இங்கு குடிநீர் பிரச்சினை ஏற்பட்டது. இதை தவிர்க்க ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதிய குடிநீர் திட்டப்பணிகள் முடிவடையும் போது நகராட்சி மக்களுக்கு தினசரி குடிநீர் கிடைக்கும். ஊரக உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரையில் நமது மாவட்டத்தில் எந்த பிரச்சினையும் இன்றி முடிக்கப்பட்டு உள்ளது. கொசவம்பட்டி ஏரியை சீரமைக்க விரைவில் நிதிபெற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தவறான பிரசாரம்

பின்னர் அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:- அ.தி.மு.க. அரசை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக வழி நடத்தி வருகிறார். அந்த நல்லாட்சிக்கு அங்கீகாரமாக உள்ளாட்சி தேர்தலில் நல்ல வாய்ப்புகளை பெற்று உள்ளோம். இதனை பொறுத்துக்கொள்ள முடியாததால் தான் தி.மு.க.வினர் நீதிமன்றத்திற்கு சென்று உள்ளனர். அரசு அதிகாரிகள் அ.தி.மு.க.விற்கு ஆதரவாக இருந்திருந்தால் தி.மு.க. எவ்வாறு வெற்றி பெற்றிருக்க முடியும். தி.மு.க.வினர் தவறான பிரசாரத்தை மேற்கொள்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலை ஒப்பிடும் போது உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்று உள்ளது.

வருகிற 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும். மாநகராட்சி, நகராட்சிகளுக்கான தேர்தல் சட்டப்படி நடக்கும். நீட் தேர்வை பொறுத்தவரை வேண்டாம் என்பது தான் எங்களின் கொள்கை எங்களின் கொள்கையின் அடிப்படையில் தான் நாங்கள் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி, உதவி கலெக்டர் கோட்டை குமார், கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் பாலமுருகன், முன்னாள் எம்.பி. பி.ஆர்.சுந்தரம், நகர கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் டி.எல்.எஸ்.காளியப்பன், நகராட்சி முன்னாள் துணை தலைவர் சேகர், நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் மின்னாம்பள்ளி நடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் நேற்று பள்ளிபாளையம், திருச்செங்கோடு, பரமத்தி, சேந்தமங்கலம் மற்றும் ராசிபுரம் பகுதிகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகிேயார் தொடங்கி வைத்தனர்.

Next Story