பெரம்பலூர் அருகே பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணி மும்முரம்


பெரம்பலூர் அருகே பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 7 Jan 2020 10:14 PM GMT (Updated: 7 Jan 2020 10:14 PM GMT)

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெரம்பலூர் அருகே உள்ள பாளையம் பகுதியில் பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பெரம்பலூர்,

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. பொங்கல் அன்று வீடுகளில் மண்பானையில் பச்சரிசியால் பொங்கலிட்டு சூரியபகவானுக்கு படையலிட்டு வழிபடுவது தமிழர்களின் வழக்கமாகும். நகரம், கிராமம் என்ற பாகுபாடு இன்றி அனைத்து குடும்பங்களிலும் மண்பானையில் பொங்கலிடுவது தொன்று தொட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் மரபாக உள்ளது. மேலும் புதுமண தம்பதிகளுக்கு பெண் வீட்டில் இருந்து பொங்கல் படியாக கொடுக்கும் சீர்வரிசை பொருட்களில் பானையும் கொடுக்கப்படுவது வழக்கம்.

இதனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் பாளையம், செட்டிகுளம், சிறுவாச்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறிய அளவிலான பானை முதல் பெரிய அளவிலான வரை பானைகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். முழுமை பெற்ற பொங்கல் பானைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்து உள்ளனர்.

இதேபோல் பொங்கல் பானை வைத்து பொங்கலிடுவதற்கு மண் அடுப்புகள் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் நேரடியாக இங்கு வந்து விற்பனைக்காக பொங்கல் பானை மற்றும் மண் அடுப்புகளை வாங்கி செல்கிறார்கள். பானை தயாரிக்க தேவையான களிமண், தயாரித்த மண் பாண்டங்களை சுடுவதற்கு தேவையான தேங்காய் மட்டை உள்ளிட்ட பொருட்கள் விலை ஏற்றத்தால், கடந்த ஆண்டு 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிறிய பானை, இந்த ஆண்டு ரூ.50 முதல் ரூ.60 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

பொங்கல் பானை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள குரும்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட பாளையம் 4-வது வார்டு கீழவீதியை சேர்ந்த முருகேசன் என்கிற தொழிலாளி கூறுகையில், பாளையம் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் உள்ளனர். மண்பாண்டம் தயாரிக்கும் தொழிலில் தற்போது போதிய வருமானம் கிடைப்பதில்லை. இதனால் அடுத்து வரும் தலைமுறையினர் இந்த தொழிலில் ஈடுபடுவதற்கு விருப்பம் இல்லாமல் இருக்கின்றனர். கிடைக்கின்ற மற்ற வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கின்றனர்.

இதனால் தற்போது பாளையம் பகுதியில் விரல் விட்டு எண்ணக்கூடிய தொழிலாளர்களை மண்பாண்டம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதும் பழைய முறைபடியே சக்கரத்தை பயன்படுத்தி ஒரு நாளைக்கு 50 பானைகள் கூட செய்ய முடியவில்லை.

ஏரியில் இருந்து களிமண் கொண்டு வர, ஒரு லோடுக்கு ரூ.6 ஆயிரம் வரை கொடுக்க வேண்டியுள்ளது. பானை செய்வதற்கு தேவையான மூலப்பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இருப்பினும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏராளமான வியாபாரிகள் எங்களை நம்பி ஆர்டர் கொடுக்கின்றனர்.

இதற்காக பானைகள் தயாரிக்க அதிகமாக உழைக்கிறோம். ஆனால், உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை. எங்கள் பகுதியில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால பராமரிப்பு உதவித்தொகை மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன், மாறுபட்ட வேகத்துடன் கூடிய சீலாவீல் (மின்சக்கரங்கள்) கொடுக்கவில்லை. எனவே அதனை வழங்குவதற்கு பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Next Story