ஜல்லிக்கட்டு போட்டியில் விதிமுறைகள் பின்பற்றப்படுவதை கண்காணிக்க குழு அமைப்பு - கலெக்டர் தகவல்


ஜல்லிக்கட்டு போட்டியில் விதிமுறைகள் பின்பற்றப்படுவதை கண்காணிக்க குழு அமைப்பு - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 8 Jan 2020 10:30 PM GMT (Updated: 8 Jan 2020 2:29 PM GMT)

ஜல்லிக்கட்டு போட்டியில் விதிமுறைகள் பின்பற்றப்படுவதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு உள்ளது என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளை நீதிமன்ற விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்துவது குறித்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சரவணன், வருவாய் கோட்டாட்சியர்கள் டெய்சிகுமார், குணசேகரன், தண்டாயுதபாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து கலெக்டர் உமா மகேஸ்வரி நிருபர்களிடம் கூறுகையில், பொங்கல் திருநாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் பெருமை வாய்ந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின் படி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் இந்த கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகள் முறையாக நடத்தப்படுவதை கண்காணிக்கும் வகையில் கோட்ட அளவில் 6 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் ஜல்லிக்கட்டு விழாக்களுக்கான ஏற்பாடுகளை தணிக்கை செய்யும் வகையில் 10 பேர் கொண்ட தணிக்கை குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே மாவட்ட நிர்வாகத்திடம் எழுத்துப்பூர்வமாக தகவல் தெரிவிக்க வேண்டும். ஜல்லிக்கட்டில் பங்கேற்க உள்ள காளைகள் மற்றும் வீரர்கள் குறித்த விவரங்களை அமைப்பாளர்கள் முன்னரே தெரிவித்து முன் அனுமதி பெறுவதுடன் காளைகளின் உடல் தகுதி சான்றிதழை காளை உரிமையாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும். போட்டியில் பங்குபெறும் காளைகளுக்கு எவ்வித ஊக்கமருந்துகளோ மற்றும் எரிச்சல் அளிக்கக்கூடிய பொருட்களை கண்டிப்பாக செலுத்தக்கூடாது.

மேலும் பொதுப்பணித் துறையினர் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடம், விழா மேடை, பார்வையாளர் அமையும் இடம் போன்ற பல்வேறு பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டு உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிசெய்வதுடன் கால்நடை மருத்துவர்கள் பார்வையிட்டு போட்டியில் கலந்து கொள்ளும் காளைகள் பரிசோதனை செய்து அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. போலீசார் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதுடன், வருவாய் துறையினர் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான இதர பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றார்.

Next Story