கடலூரில், பிரபல கடையில், 104 பவுன் நகைகள் திருட்டு - ஊழியரிடம் போலீஸ் விசாரணை


கடலூரில், பிரபல கடையில், 104 பவுன் நகைகள் திருட்டு - ஊழியரிடம் போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 8 Jan 2020 10:15 PM GMT (Updated: 9 Jan 2020 12:19 AM GMT)

கடலூரில் பிரபல நகைக்கடையில் 104 பவுன் நகைகளை திருடிய ஊழியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்,

கடலூர் சான்றோர்பாளையம் காந்திநகரை சேர்ந்தவர் தென்பாண்டியன் மகன் கலைச்செல்வம்(வயது 29). இவர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பிரபல நகைக்கடையில் நெக்லஸ் பிரிவில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி கடை உரிமையாளர் வியாபார கணக்குகளை சரிபார்த்தபோது முரண்பாடு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து நெக்லஸ் பிரிவை தணிக்கை செய்ததில் அங்குள்ள நகைகளை கலைச்செல்வம் ஒவ்வொன்றாக திருடியது தெரியவந்தது. கடந்த சில நாட்களாக மொத்தம் 833.200 கிராம்(104 பவுன்) நகைகளை அவர் திருடி இருக்கிறார். இதன்மதிப்பு ரூ.25 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இது குறித்து நகைக்கடை உரிமையாளர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவுசெய்து கலைச்செல்வத்தை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையின் முடிவில், அவர் நகைகளை எப்படி திருடினார்?, அதனை என்ன செய்தார்? என்பது பற்றி தெரியவரும். இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story