பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் ரே‌‌ஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு


பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் ரே‌‌ஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு
x
தினத்தந்தி 9 Jan 2020 10:30 PM GMT (Updated: 9 Jan 2020 8:23 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரே‌‌ஷன் கடைகளில் ரூ.ஆயிரத்துடன் கூடிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதனை குடும்ப அட்டைதாரர்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கி சென்றனர்

பெரம்பலூர், 

தமிழக மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் 2 அடி கரும்புத்துண்டு, தலா 20 கிராம் முந்திரி, திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்புடன் சிறப்பு பொங்கல் பரிசாக ரூ.ஆயிரமும் வழங்கிட தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.ஆயிரத்துடன் கூடிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா கடந்த 5-ந் தேதி அமைச்சர் வளர்மதியால் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று முதல் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 282 ரே‌‌ஷன் கடைகளிலும் பகுதி வாரியாக பிரித்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பினை வாங்குவதற்காக ரே‌‌ஷன் கடைகளுக்கு குடும்ப அட்டைதாரர்கள் படையெடுத்தனர். இதனால் ரே‌‌ஷன் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கி, ஒழுங்குபடுத்தி நீண்ட வரிசையில் நிற்க வைத்து ரூ.ஆயிரத்துடன் கூடிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பினை வாங்க அனுப்பினர். இதையடுத்து அவர்கள் ரே‌‌ஷன் கடை ஊழியரிடம் ரூ.ஆயிரத்துடன் கூடிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பினை வாங்கி சென்றனர்.

நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வரை அனைத்து ரே‌‌ஷன் கடைகளிலும் காலை 9 மணி முதல் மதியம் 1 வரையிலும், மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் பகுதி வாரியாக பிரித்து வழங்கப்படும். விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு 13-ந் தேதி வழங்கப்படுகிறது.

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ரே‌‌ஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இதனை வாங்க அந்தந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ரே‌‌ஷன் கடையில் நீண்ட வரிசையில் நின்று வாங்கி சென்றனர்.

Next Story