படித்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் சி.கதிரவன் தகவல்


படித்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் சி.கதிரவன் தகவல்
x
தினத்தந்தி 10 Jan 2020 10:45 PM GMT (Updated: 10 Jan 2020 2:02 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார். ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

ஈரோடு, 

தமிழக அரசு சார்பில் படித்த வேலைவாய்ப்பற்றோர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாதம் ஒன்றுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200-ம், தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300-ம், பிளஸ்-2 படித்தவர்களுக்கு ரூ.400-ம், பட்டதாரிகளுக்கு ரூ.600-ம் வழங்கப்பட்டு வருகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு ரூ.600-ம், மேல்நிலை கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750-ம், பட்டதாரிகளுக்கு ரூ.1,000-ம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் வருகிற மார்ச் மாதம் 31-ந்தேதியுடன் முடிவடையும் காலாண்டிற்கு, கீழ் கண்ட தகுதியுடைய படித்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி, தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட கல்வி தகுதியுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் பதிவினை தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து ஒரு வருடம் பூர்த்தி செய்திருந்தால் போதும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 31.12.2017 அன்று 45 வயதும், மற்றவர்களுக்கு 40 வயதும் கடந்திருக்க கூடாது.

விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும். பள்ளிக்கூடம், கல்லூரியில் நேரிடையாக படித்துக்கொண்டிருக்க கூடாது. முற்றிலும் வேலையில்லாதவராக இருத்தல் வேண்டும். பள்ளிக்கூடம், கல்லூரி கல்வியை முழுமையாக தமிழ்நாட்டில் முடித்திருக்க வேண்டும். எந்தவொரு நிதி உதவியையும் பெறுபவராக இருத்தல் கூடாது.

இந்த உதவித்தொகை பெற முதல் முறையாக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்ப படிவங்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பெற்று, பூர்த்தி செய்து, தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தொடங்கப்பட்ட கணக்கு புத்தகம் மற்றும் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட பிற சான்றுகளுடன் வருகிற பிப்ரவரி மாதம் 28-ந்தேதிக்குள் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் அளிக்க வேண்டும். மேலும் ஏற்கனவே உதவித்தொகை பெற்று 3 ஆண்டு நிறைவுபெறாதவர்கள் சுயஉறுதி ஆவணம் அளித்து தொடர்ந்து உதவித்தொகை பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்


Next Story