‘‘சுதந்திர காஷ்மீர்’’ என்ற பதாகையுடன் மாணவர் போராட்டத்தில் பங்கேற்ற தமிழக இளம்பெண்ணுக்கு வலைவீச்சு


‘‘சுதந்திர காஷ்மீர்’’ என்ற பதாகையுடன் மாணவர் போராட்டத்தில் பங்கேற்ற தமிழக இளம்பெண்ணுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 10 Jan 2020 11:30 PM GMT (Updated: 10 Jan 2020 4:50 PM GMT)

‘‘சுதந்திர காஷ்மீர்’’ என்ற பதாகையுடன் மாணவர் போராட்டத்தில் பங்கேற்ற தமிழக இளம்பெண்ணை மைசூரு போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

மைசூரு, 

புதுடெல்லியில் இருக்கும் ஜவஹர்லால் நேரு(ஜே.என்.யூ.) பல்கலைக்கழக மாணவிகள் விடுதிக்குள் நுழைந்து சிலர் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதேபோல் நேற்று முன்தினம் ஜே.என்.யூ. மாணவிகள் தாக்கப்பட்டதை கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மைசூருவில் உள்ள மைசூரு பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலத்தில் ஈடுபட்டனர். ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் சிலர் மத்திய அரசை கண்டித்தும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியிருந்தனர்.

இந்த நிலையில் ஊர்வலத்தில் பங்கேற்ற ஒரு இளம்பெண் ‘‘சுதந்திர காஷ்மீர்’’ என்ற வாசகம் அடங்கிய பதாகையை கையில் வைத்துக் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கும் எதிராக கோஷங்கள் எழுப்பியதாக தெரிகிறது. மேலும் காஷ்மீருக்கான சுதந்திரத்தை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அவர் கோஷமிட்டதாக கூறப்படுகிறது.

இது கலவரத்தை தூண்டும் வகையில் இருந்ததாகக் கூறி அந்த இளம்பெண் குறித்து மைசூரு ஜெயலட்சுமிபுரம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த இளம்பெண்ணின் பெயர் நளினி என்பதும், அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் அந்த இளம்பெண்ணின் தந்தை பெயர் பாலகுமார் என்பதும், அவர் தமிழ்நாட்டில் கல்வித்துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் என்பதும் தெரியவந்தது.

இளம்பெண் நளினி கடந்த 2016-ம் ஆண்டு மைசூரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஊடகவியல் மற்றும் பத்திரிகை துறை சார்ந்த படிப்பை தேர்வு செய்து படித்துள்ளார். பின்னர் அவர் குஜராத்துக்கு சென்று அதே பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். பின்னர் மீண்டும் மைசூருவுக்கு வந்த அவர், புகைப்பட கலைஞராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்த சமயத்தில்தான் நேற்று முன்தினம் மைசூரு பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் நடத்திய போராட்டம் மற்றும் ஊர்வலத்தில் அவர் கலந்து கொண்டு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார். இளம்பெண் நளினி எப்போதும் தனது முகநூல் பக்கத்தில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு எதிராகவும், மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து மைசூருவில் நளினி தங்கியிருந்த வீட்டுக்கு நேற்று போலீசார் சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை. அவர் தலைமறைவாகி விட்டது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து இளம்பெண் நளினியை வலைவீசி தேடிவருகிறார்கள்.

மேலும் இளம்பெண் நளினி, மாணவ-மாணவிகள் ஊர்வலத்தை தலைமை தாங்கி நடத்திய சத்ய சம்சோதனா சங்க தலைவர் மரிதேவய்யா ஆகியோர் மீது ஜெயலட்சுமிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story