துப்பாக்கியால் சுட்ட பிறகு சப்-இன்ஸ்பெக்டர் உடலை கத்தியாலும் வெட்டிய பயங்கரவாதிகள்; போலீசார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்


துப்பாக்கியால் சுட்ட பிறகு சப்-இன்ஸ்பெக்டர் உடலை கத்தியாலும் வெட்டிய பயங்கரவாதிகள்; போலீசார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்
x

துப்பாக்கியால் சுட்ட பிறகு சப்-இன்ஸ்பெக்டர் உடலை கத்தியாலும் பயங்கரவாதிகள் வெட்டி உள்ளனர் என்று போலீசார் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டனர். இதுகுறித்து போலீசார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள் வருமாறு:-

நாகர்கோவில், 

குமரி மாவட்டம் களியக்காவிளை சந்தைரோடு சோதனைச்சாவடியில் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கடந்த 8-ந் தேதி இரவு அப்துல் சமீம், தவுபிக் ஆகிய 2 பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டார்.

அவருடைய உடலில் 4 இடங்களில் துப்பாக்கி தோட்டாக்கள் துளைத்த காயங்களும், 5 இடங்களில் வெட்டுக்கத்தியால் வெட்டப்பட்ட காயங்களும் இருந்தன. கொலையாளிகளில் ஒருவர்் முதலில் வில்சனின் வலது தொடையில் துப்பாக்கியால் சுட்டு அவரை ஓடவிடாமல் செய்துள்ளார். அதன் பிறகு மார்பு, கழுத்து, இடது விலா பகுதியில் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார். பின்னர் அவரை சோதனைச்சாவடியில் இருந்து வெளியில் இழுத்துப்போட்டுள்ளனர். அதன்பிறகு மற்றொருவன் அவருக்கு உயிர் இருக்கிறதா? என்பதை சோதித்துப்பார்க்க வெட்டுக்கத்தியால் இடது தொடை, வலது மூட்டு, வலது கை சுண்டு விரல் உள்பட 5 இடங்களில் வெட்டியுள்ளார்.இதன்மூலம் அவரது உடலில் அசைவு ஏற்படுகிறதா? என்று அவர்கள் சோதித்து பார்த்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

துப்பாக்கியால் சுட்டதில் ஒரு தோட்டா மட்டும் வலது தொடையில் இருந்தது. அதை மட்டும் பிரேத பரிசோதனையின்போது டாக்டர்கள் அகற்றியுள்ளனர். மற்ற இடங்களில் பாய்ந்த குண்டுகள் ஒருபுறம் துளைத்து மறுபுறம் வெளியேறிவிட்டதாக தெரிகிறது.

டாக்டர்களால் அகற்றப்பட்ட தோட்டா, பிஸ்டல் வகை துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் தோட்டா என்பதும், அந்த தோட்டா காவல்துறையில் பயன்படுத்தப்படும் தோட்டாவை விட சற்று சிறியதாக இருந்ததாக போலீசார் கூறினர். கொலையாளி பயன்படுத்திய பிஸ்டல் வடமாநிலங்களில் வாங்கியதாக இருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

Next Story