வடமதுரை அருகே, இளம்பெண்ணை வெட்டிக்கொன்ற கள்ளக்காதலன் கைது


வடமதுரை அருகே, இளம்பெண்ணை வெட்டிக்கொன்ற கள்ளக்காதலன் கைது
x
தினத்தந்தி 11 Jan 2020 10:45 PM GMT (Updated: 11 Jan 2020 7:04 PM GMT)

வடமதுரை அருகே இளம்பெண்ணை வெட்டிக்கொன்ற கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.

வடமதுரை, 

வடமதுரையை அடுத்த செங்குறிச்சி கம்பிளியம்பட்டியில், பூத்தம்பட்டியில் இருந்து ஒத்தகணவாய்ப்பட்டி செல்லும் சாலையில் உள்ள செங்கல் காளவாசல் அருகே நேற்று முன்தினம் காலை அரிவாள் வெட்டுக்காயங்களுடன் இளம்பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கருப்பசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் இறந்தவர் கம்பிளியம்பட்டி அருகே உள்ள நிலப்பட்டியை சேர்ந்த ஜெயக்குமார் மனைவி திவ்யபாரதி (வயது 22) என்பது தெரியவந்தது.

ஜெயக்குமார் விழுப்புரத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் திவ்யபாரதி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இவருக்கு, செங்காட்டுப்பட்டியை சேர்ந்த பால் வியாபாரி ராமச்சந்திரன் (30) என்பவருடன் கள்ளக்காதல் இருந்தது. இதனையடுத்து ராமச்சந்திரனை பிடித்து போலீசார் விசாரித்ததில், திவ்யபாரதியை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

திவ்யபாரதிக்கும், அவருடைய கணவர் ஜெயக்குமாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராமச்சந்திரனுடன், திவ்யபாரதிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இவர்கள் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்தனர்.

ராமச்சந்திரனுக்கு ஏற்கனவே திருமணமாகி நந்தினி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இந்தநிலையில் ராமச்சந்திரனிடம் பேசுவதை திவ்யபாரதி தவிர்த்து வந்தார். மேலும் திவ்யபாரதியை செல்போனில் தொடர்பு கொண்டபோது, அவரது செல்போன் இணைப்பு பிசியாக இருந்துள்ளது.

இதனால் திவ்யபாரதி வேறு எந்த ஆணுடனும் தொடர்பு ஏற்பட்டு பேசிக்கொண்டிருக்கிறாரா என்று ராமச்சந்திரன் சந்தேகம் அடைந்தார். எனவே அவரை கொலை செய்ய திட்டமிட்டார். இதனையடுத்து திவ்யபாரதியிடம் தனியாக பேச வேண்டும் என்று சம்பவ இடத்துக்கு வரவழைத்தார்.

அதன்பேரில் அங்கு வந்த திவ்யபாரதியும், ராமச்சந்திரனும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராமச்சந்திரன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் திவ்யபாரதியை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதனையடுத்து நாங்கள் அவரை கைது செய்து விட்டோம்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

Next Story