கீழக்கரையில் புதிதாக கட்டப்பட்ட ஜெட்டி பாலம் சேதம் சீரமைக்க வலியுறுத்தல்


கீழக்கரையில் புதிதாக கட்டப்பட்ட ஜெட்டி பாலம் சேதம் சீரமைக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 Jan 2020 10:30 PM GMT (Updated: 11 Jan 2020 8:58 PM GMT)

கீழக்கரையில் புதிதாக கட்டப்பட்ட ஜெட்டி பாலம் சேதமடைந்துள்ளது. முக்கிய பகுதியான இங்கு பெரும் விபத்து ஏற்படும் முன்பு பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கீழக்கரை,

கீழக்கரையில் பழைய ஜெட்டி பாலம் சேதமடைந்து இருந்தது. அதைத்தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.5 கோடியே 31 லட்சம் செலவில் புதிய பாலம் கட்டப்பட்டது. இந்தநிலையில் புதிதாக கட்டப்பட்ட இந்த பாலத்தின் தரைப்பகுதி சில மாதங்களிலேயே சேதமடைந்தது.

மேலும் பாலத்தில் விரிசல் ஏற்பட்டது. இதேபோல பாலத்தின் அருகே அலைகளின் வேகத்தை தடுப்பதற்காக கட்டப்பட்ட தடுப்பு சுவரும் சேதமடைந்து விட்டன. இந்த ஜெட்டி பாலம் கட்டப்பட்டு சில மாதங்களிலேயே சேதமடைந்திருப்பது மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து மீனவர் முகமது இபுராகீம் என்பவர் கூறியதாவது:- கீழக்கரையில் உள்ள மீனவர்கள் நலன் கருதி பெரும் பொருட்செலவில் புதிதாக ஜெட்டி பாலம் கட்டப்பட்டது. ஆனால் இந்த பாலம் கட்டப்பட்ட சில மாதங்களிலேயே சேதமடைய தொடங்கி விட்டது.

சீரமைக்க வேண்டும்

இந்த சேதங்களை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வந்து பார்வையிட்டு சென்றனர். ஆனால் அதன் பின்னர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது இந்த பாலத்தில் மேலும் பல பகுதிகள் சேதமடைந்துள்ளதுடன் தடுப்பு சுவரும் இடிந்துள்ளது.

மீனவர்கள் படகுகளில் பிடித்து வரப்படும் மீன்கள் இந்த பாலத்தின் அருகில் தான் நிறுத்தி இறக்கப்படுகிறது. அந்த மீன்களை ஏற்றி செல்ல இந்த பாலத்தில் வாகனங்கள் வந்து செல்கின்றன.

இந்த நிலையில் ஜெட்டி பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதால், பாலம் மேலும் சேதமடைந்து பெரும் விபத்து நேரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு ஜெட்டி பாலத்தை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story