உறையூரில் வீட்டின் கதவை உடைத்து 10¼ பவுன் நகைகள் திருட்டு


உறையூரில் வீட்டின் கதவை உடைத்து 10¼ பவுன் நகைகள் திருட்டு
x
தினத்தந்தி 11 Jan 2020 10:15 PM GMT (Updated: 11 Jan 2020 9:50 PM GMT)

திருச்சி உறையூரில் வீட்டின் கதவை உடைத்து 10¼ பவுன் நகைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்சி,

திருச்சி உறையூர் சீனிவாச நகர் 6-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 61). இவர் கடந்த 8-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் ராமேசுவரம் கோவிலுக்கு சென்றார். பின்னர் 9-ந் தேதி இரவு அவர் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் நுழைவு வாயில் இரும்பு கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் வீட்டிற்குள் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருந்தது. இதனை கண்ட கணேசன் அதிர்ச்சியடைந்தார்.

அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 10¼ பவுன் நகைகள் திருட்டு போயிருந்தன. இது குறித்து உறையூர் போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் தங்களது கைவரிசையை காட்டி நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து வீட்டில் தடயங்களை போலீசார் சேகரித்தனர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

போலீசார் வலைவீச்சு

இந்த சம்பவம் தொடர்பாக உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தி, நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story