வேலூர் அருகே, மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் தாய், மகள் பலி


வேலூர் அருகே, மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் தாய், மகள் பலி
x
தினத்தந்தி 12 Jan 2020 10:45 PM GMT (Updated: 12 Jan 2020 3:11 PM GMT)

வேலூர் அருகே உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது, மோட்டார்சைக்கிள் மீது கன்டெய்னர் லாரிமோதியதில் தாய், மகள் பலியானார்கள். வாலிபர் காயமடைந்தார். இந்த விபத்து பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

வேலூர், 

அணைக்கட்டு தாலுகா ஆண்டிக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சின்னபாப்பம்மாள் (வயது60). இவருடைய மகள் சுமதி (40). சுமதியின் மகன் (மணிவண்ணன் (20). காட்பாடி கழிஞ்சூரில் நேற்று சுமதியின் உறவினர் வீட்டு நிகழ்ச்சி நடந்தது.

இதில் கலந்துகொள்வதற்காக சின்னபாப்பம்மாள், சுமதி, மணிவண்ணன் ஆகிய 3 பேரும் மோட்டார் சைக்கிளில் சென்றனர். நிகழ்ச்சி முடிந்ததும் அவர்கள் மீண்டும் ஊருக்கு புறப்பட்டனர்.

மணிவண்ணன் மோட்டார்சைக்கிளை ஓட்ட அவருக்கு பின்னால் சின்னபாப்பம்மாள் அமர்ந்திருந்தார். அதற்கு பின்னால்சுமதி அமர்ந்திருந்தார். சென்னை– பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சேண்பாக்கம் மேம்பாலத்தில் சென்றபோது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி மோட்டார்சைக்கிள்மீது மோதியது.

இதில் நிலைதடுமாறி மோட்டார்சைக்கிளில் இருந்து 3 பேரும் கீழேவிழுந்தனர். அப்போது சுமதியின் தலைமீது லாரியின் முன்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். சின்னபாப்பம்மாள், மணிவண்ணன் ஆகிய இருவரும் காயமடைந்தனர்.

உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சென்ற சிறிது நேரத்தில் சின்னபாப்பம்மாள் இறந்துவிட்டார்.

தகவல் அறிந்ததும் வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சுமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story