நெமிலி அருகே பரிதாபம்: அக்காள், தம்பி குளத்தில் மூழ்கி சாவு - விளையாடியபோது தவறி விழுந்தனர்


நெமிலி அருகே பரிதாபம்: அக்காள், தம்பி குளத்தில் மூழ்கி சாவு - விளையாடியபோது தவறி விழுந்தனர்
x
தினத்தந்தி 12 Jan 2020 11:00 PM GMT (Updated: 12 Jan 2020 4:01 PM GMT)

நெமிலி அருகே அக்காள், தம்பி இருவர் விளையாடியபோது குளத்தில் தவறிவிழுந்து பலியானார்கள்.

பனப்பாக்கம், 

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த மேலேரி கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (வயது 48) கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி அமுலு. இவர்களுக்கு ஹரினி (4) என்ற மகளும், தர்ஷன் (2) என்ற மகனும் இருந்தனர். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று பகலில் முனுசாமியின் மனைவி அமுலு வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். குழந்தைகள் ஹரினி, தர்ஷன் ஆகிய இருவரும் வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தனர்.

திடீரென அவர்கள் இருவரும் வீட்டின் அருகில் உள்ள நல்லதண்ணீர் குளம் பகுதிக்கு சென்று விளையாடியதாகக் கூறப்படுகிறது. அப்போது மதியம் நேரம் என்பதால் ஆள்நடமாட்டம் இன்றி இருந்துள்ளது. குளத்துக்கு சென்ற இருவரும் கால்தவறி குளத்துக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கி உள்ளனர்.

இதில் அவர்கள் இருவரும் மூச்சுத்திணறி சிறிது நேரத்தில் இறந்துவிட்டனர். நீண்டநேரத்திற்கு பிறகு அந்த வழியாக சென்ற பொதுமக்கள், குழந்தைகள் இருவரும் தண்ணீரில் மூழ்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்களை மீட்டு நெமிலியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்துபார்த்து ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பாணாவரம் இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ஹரினி, தர்ஷன் ஆகியோரின் உடலை பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே நேரத்தில் இரண்டு குழந்தைகளையும் பறிகொடுத்த பெற்றோர் கதறி அழுதது அனைவரையும் கண்கலங்க வைத்தது.

கடந்த வாரம் பாணாவரம் பகுதியில் 3 பேர் குளத்தில் மூழ்கி பலியானது குறிப்பிடத்தக்கது.

Next Story