தமிழக சப்-இன்ஸ்பெக்டர் கொலையில் தொடர்பு? குண்டலுபேட்டையில் பதுங்கி இருந்த - 2 பயங்கரவாதிகள் கைது


தமிழக சப்-இன்ஸ்பெக்டர் கொலையில் தொடர்பு? குண்டலுபேட்டையில் பதுங்கி இருந்த - 2 பயங்கரவாதிகள் கைது
x
தினத்தந்தி 12 Jan 2020 11:30 PM GMT (Updated: 12 Jan 2020 6:31 PM GMT)

கர்நாடக மாநிலம் குண்டலுபேட்டையில் பதுங்கியிருந்த 2 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்தனர். அவர்கள் 2 பேருக்கும் தமிழக சப்-இன்ஸ்பெக்டர் கொலையில் தொடர்பா? என பெங்களூருவுக்கு அழைத்து வந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

கொள்ளேகால்,

கர்நாடகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் இருப்பதாக மாநில அரசுக்கு, மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது.

அதன்படி கர்நாடகம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், விமான நிலையம் உள்பட பல இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் சென்னையில் நடந்த இந்து பிரமுகர் கொலை வழக்கில் தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சையது அலி, நவாஸ், அப்துல் சமீன் மற்றும் கடலூரை சேர்ந்த காஜா முகமது ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த சிலருடன் இவர்கள் 3 பேரும் பயங்கரவாத சதித்திட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியானது.

இதையடுத்து பெங்களூருவை சேர்ந்த ஹனீப்கான், இம்ரான்கான், முகமது சையது ஆகிய 3 பேரையும் தமிழக கியூ பிரிவு போலீசார் கைது செய்து இருந்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் தமிழகத்தில் தாக்குதல் நடத்த பெங்களூருவில் தனி அமைப்பு தொடங்கி செயல்பட்டது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே தமிழ்நாடு- கேரள எல்லைப்பகுதியில் உள்ள கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரி வில்சனை, 2 பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர். அந்த 2 பயங்கரவாதிகளும் கேரளாவில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். மேலும் தங்கள் கூட்டாளிகளை போலீசார் கைது செய்த ஆத்திரத்தில், இந்த கொலை சம்பவம் அரங்கேறி இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்ட 3 பயங்கரவாதிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் தெரியவந்தது. அதாவது, கேரளாவில் தடை செய்யப்பட்ட அல்-உம்மா இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதியான மெகபூப் பாஷா என்பவர் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டையில் பதுங்கி இருப்பதும், அவருக்கு கடந்த 10 நாட்களாக மதராசா பள்ளியில் மதகுருவாக உள்ள சதாகத் உல்லாகான் அடைக்கலம் கொடுத்து வருவதும் தெரியவந்தது.

இதுகுறித்து தமிழக போலீசார், பெங்களூருவில் உள்ள பயங்கரவாத ஒழிப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நேற்று மதியம் குண்டலுபேட்டைக்கு சென்ற பயங்கரவாத ஒழிப்பு படையினர், குண்டலுபேட்டை டவுன் போலீசாருடன் இணைந்து சதாகத் உல்லாகான் (வயது 35), மெகபூப் பாஷா ஆகியோரை கைது செய்தனர்.

இதில் சதாகத் உல்லாகானுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. கைதான 2 பேரையும் போலீசார் போலீஸ் வாகனத்தில் ஏற்றி பெங்களூருவுக்கு அழைத்து சென்றனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கைதான 2 பேரும் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகத்தில் இந்து அமைப்பு பிரமுகர்களை கொலை செய்ய திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்துள்ளது. அவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன் களியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டர் கொலை சம்பவத்திலும் இவர்களுக்கு தொடர்பு இருக்கிறதா? எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், சதாகத் உல்லாகான் பயங்கரவாதியான மெகபூப் பாஷாவுக்கு அடைக்கலம் கொடுத்ததால் அவரை கைது செய்து உள்ளோம். அவருக்கும், பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு உள்ளதா? என்பது விசாரணை நடத்திய பிறகு தான் தெரியவரும் என்றார்.

பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக குண்டலுபேட்டையில் 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story