தஞ்சையில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு எழுத்து தேர்வு 2,245 பேர் எழுதினர்


தஞ்சையில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு எழுத்து தேர்வு 2,245 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 12 Jan 2020 10:45 PM GMT (Updated: 12 Jan 2020 8:24 PM GMT)

தஞ்சையில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வை 2,245 பேர் எழுதினர்.

கள்ளப்பெரம்பூர்,

தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு ஆணையம் மூலம் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. இந்த தேர்விற்காக தஞ்சை மாவட்டத்தில் 3,096 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர்.

தஞ்சையை அடுத்த வல்லம் அருகே உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 1,879 ஆண்களும், 366 பெண்கள் உள்பட மொத்தம் 2,245 பேர் எழுதினர்.

தேர்வு எழுத வந்தவர்கள் தேர்வு மையத்தின் நுழைவு வாயிலிலேயே தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். தேர்வர்கள் அணிந்து வந்திருந்த பெல்ட், ஷூ ஆகியவைகளை நுழைவு வாயிலில் கழற்றி வைத்த பிறகே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். பெண்களின் ஆடைகளை பெண் போலீசார் சோதனை செய்த பிறகே அனுமதிக்கப்பட்டனர். செல்போன், பர்ஸ், வாட்ச் ஆகியவை தேர்வு மையம் உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

டி.ஐ.ஜி. ஆய்வு

மணிபர்ஸ், செல்போன், வாட்ச் ஆகியவற்றை பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரிடம் ஒப்படைத்து விட்டு டோக்கன் பெற்றுக்கொண்டு தேர்வர்கள் தேர்வு அறைக்குள் சென்றனர். காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிந்ததும் வினா தாள் ஆய்வு உள்பட பல்வேறு பணிகள் முடிக்கப்பட்டு மதியம் 2 மணிக்கு பிறகே தேர்வு மையத்தில் இருந்து தேர்வர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதனால் தேர்வு எழுத வந்தவர்களை அழைத்து செல்ல வந்தவர்கள் நீண்ட நேரம் வெளியில் காத்திருந்தனர்.

போதிய பஸ் இல்லாததால் தேர்வு எழுத வந்தவர்கள் சிரமம் அடைந்தனர். தேர்வு மையத்தை தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன், தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், தஞ்சை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தேர்வு மையத்தில் 4 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 10 இன்ஸ்பெக்டர்கள், 42 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

காவல் துறையில் பணி புரியும் போலீசாருக்கு சப்-இன்ஸ்பெக்டருக்கான எழுத்து தேர்வு இன்று(திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

Next Story