திருப்பூர் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு 1,603 பேர் எழுதினர்


திருப்பூர் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு 1,603 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 12 Jan 2020 11:00 PM GMT (Updated: 12 Jan 2020 9:46 PM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு 1,603 பேர் தேர்வு எழுதினார்கள்.

திருப்பூர்,

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தின் சார்பில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்துத்தேர்வு நேற்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி, இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் எழுத்துத்தேர்வு நடைபெற்றது. மாவட்டத்தில் 2 ஆயிரத்து 194 பேர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர்.

திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் 1,197 பேரும், இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 997 பேரும் தேர்வு எழுதுவதற்கு வசதி செய்யப்பட்டது. தேர்வு எழுத வந்தவர்கள் பந்து முனைப்பேனா, அழைப்புக்கடிதம் ஆகியவற்றை மட்டும் தேர்வு அறைக்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர். செல்போன், கைப்பை, கால்குலேட்டர் உள்ளிட்டவற்றை தேர்வு மையத்துக்கு கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

1,603 பேர் எழுதினார்கள்

தேர்வு மையத்தின் முன்புறம் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தீவிர சோதனைக்கு பிறகே எழுத்துத்தேர்வுக்கு அனுமதித்தனர். தேர்வை திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல், திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் ஆகியோர் பார்வையிட்டனர்.

தேர்வில் குமரன் மகளிர் கல்லூரியில் 849 பேரும், இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 754 பேரும் என மொத்தம் 1,603 பேர் தேர்வு எழுதினார்கள். விண்ணப்பித்தவர்களில் 591 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு முடிந்ததும் விடைத்தாள்கள் அனைத்தும் திருப்பூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் பாதுகாப்புடன் வைத்து சீல் வைக்கப்பட்டது.

போலீசாருக்கு எழுத்துத்தேர்வு

இன்று(திங்கட்கிழமை) திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றும் போலீஸ்காரர்கள் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுத உள்ளனர். இதற்காக மாவட்டத்தில் 415 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்காக திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. 

Next Story