புகை இல்லாத போகி கொண்டாட வேண்டும் - கலெக்டர் பிரபாகர் அறிவுறுத்தல்


புகை இல்லாத போகி கொண்டாட வேண்டும் - கலெக்டர் பிரபாகர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 13 Jan 2020 10:30 PM GMT (Updated: 13 Jan 2020 6:34 PM GMT)

புகை இல்லாத போகியை கொண்டாட வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் அறிவுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி, 

தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளுக்கு முதல் நாள் நாம் போகி பண்டிகை கொண்டாடுகிறோம். இந்நாளில் சில பழைய பொருட்களை எரிப்பதென்பது பழையன கழிதல் என்ற வழக்கத்திற்கான அடையாளமாகும். இந்நாளில் கிழிந்த பாய்கள், பழைய துணிகள், தேய்ந்த துடப்பங்கள், தேவையற்ற கழிவுகள் ஆகியவற்றை தீயிட்டு கொளுத்துவார்கள். பெரும்பாலும் கிராமங்களில் கடைபிடிக்கப்படும் இப்பழக்கம் சுற்றுச்சூழலுக்கு பெரும் தீமையை ஏற்படுத்தாத ஒன்றாகும்.

ஆனால் தற்போது, போகியன்று மக்கள் நெருக்கம் மிகுந்த நகரங்களில் டயர், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் செயற்கை பொருட்களை எரிக்கையில் நச்சுப்புகை மூட்டம் ஏற்பட்டு, மக்களுக்கு சுவாச நோய்கள், இருமல் மற்றும் நுரையீரல், கண், மூக்கு எரிச்சல் உள்பட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

நச்சுக்காற்றாலும், கரிப்புகையாலும் காற்று மாசுப்பட்டு, நகரமே கருப்பு நகரமாக மாறுகிறது. நச்சுப்புகை கலந்த பனி மூட்டத்தால் சுகாதார பாதிப்பும், சாலை போக்குவரத்திற்கு தடையும் ஏற்படுகிறது. இது போன்ற செயல்கள் மூலம் காற்றை மாசுப்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். மேலும், நீதிமன்றம் பழைய மரம், வறட்டி தவிர வேறு எதையும் எரிப்பதற்கு தடை விதித்துள்ளது. இதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

புகை நமக்கு பகை என்பதை உணர்ந்து போகி பண்டிகையன்று டயர், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் செயற்கை பொருட்களை எரிக்க வேண்டாம். மேலும் போகி பண்டிகையை புகை இல்லாமலும், பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடனும், மாசு இல்லாமலும் கொண்டாடுவோம் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story