மாசு இல்லாத போகி பண்டிகை கொண்டாடுங்கள் - கலெக்டர்கள் வேண்டுகோள்


மாசு இல்லாத போகி பண்டிகை கொண்டாடுங்கள் - கலெக்டர்கள் வேண்டுகோள்
x
தினத்தந்தி 13 Jan 2020 10:30 PM GMT (Updated: 13 Jan 2020 6:34 PM GMT)

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் பொதுமக்கள் மாசு இல்லாத போகி பண்டிகையை கொண்டாட கலெக்டர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

பெரம்பலூர், 

அறுவடை திருநாளை தமிழர்கள் பொங்கல் திருநாளாக தொன்றுதொட்டு கொண்டாடி வருகின்றனர். தைப்பொங்கலுக்கு முதல் நாளை போகிப் பண்டிகையாக “பழையன கழிதலும், புதியன புகுதலுமாக“ கொண்டாடி வருவது வழக்கம். இந்நாளில் தமிழர்கள் திருமகளை வரவேற்கும் முகமாக தங்கள் வீட்டில் உள்ள பழைய வேண்டாத பொருட்களையும், தங்கள் வசமுள்ள செயற்கை பொருட்களான டயர்கள், பிளாஸ்டிக் மற்றும் இதர தேவையற்றவைகளையும் எரிக்கும் பழக்கத்தை கையாண்டு வருகின்றனர்.

இத்தகைய செயற்கை பொருட்களை எரிப்பதால் ஏற்படும் நச்சுப்புகைகளான கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடுகள், கந்தக டை ஆக்ஸைடு, டையாக்சின், பியூரான் மற்றும் நச்சுத்துகள்கள் ஆகியவற்றால் சுற்றுப்புற காற்றின் தன்மை மாசுபடுகிறது.

மேலும் கண், மூக்கு, தொண்டை, தோல் ஆகியவைகளில் எரிச்சலும் ஏற்படுகிறது. ஆஸ்துமா, மூச்சுத்திணறல் மற்றும் இதர உடல் நலக்கேடுகளும் ஏற்படுகிறது. இதனால் பார்க்கும் திறன் குறைபடுகிறது. இதுபோன்று காற்றை மாசுபடுத்தும் செயல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

எனவே போகிப்பண்டிகையான இன்று (செவ்வாய்க்கிழமை) பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் டயர்கள், பிளாஸ்டிக், ரப்பர் மற்றும் இதர கழிவுப்பொருட்களைக் எரிக்காமல், குப்பைகளை முறைப்படி அகற்றி போகி பண்டிகையை மாசு இல்லாமலும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடுவதுடன் சுற்றுச்சூழலையும், மக்களின் உடல்நலத்தையும் பாதுகாக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும்.

மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர்கள் சாந்தா (பெரம்பலூர்), ரத்னா (அரியலூர்) ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

Next Story