புகையில்லா போகி கொண்டாட கலெக்டர் வேண்டுகோள்


புகையில்லா போகி கொண்டாட கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 13 Jan 2020 10:30 PM GMT (Updated: 13 Jan 2020 8:10 PM GMT)

போகிப்பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொது மக்கள் ஒத்துழைக்குமாறு கலெக்டர் கண்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கலெக்டர் கண்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர்,

நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன்பு வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர். 

ஆனால் தற்பொழுது போகிப் பண்டிகையின் போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு இதனால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது. மேலும், விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது.

எனவே, இன்று கொண்டாடப்படும் போகிப்பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொது மக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Next Story