பொங்கல் பண்டிகைக்காக கட்டுக்கட்டாக வெளிமாநிலங்களுக்கு செல்லும் கரும்புகள்


பொங்கல் பண்டிகைக்காக கட்டுக்கட்டாக வெளிமாநிலங்களுக்கு செல்லும் கரும்புகள்
x
தினத்தந்தி 13 Jan 2020 10:00 PM GMT (Updated: 13 Jan 2020 8:10 PM GMT)

மேலூர் பகுதியில் இருந்து பொங்கல் பண்டிகைக்காக கரும்புகள் வெளிமாநிலங்களுக்கு லாரிகளில் அனுப்பப்பட்டு வருகிறது.

மேலூர்,

மதுரை மாவட்டம் மேலூர் பகுதி பெரியாறு பாசனத்தின் கடைசி பகுதியாகும். இதனால் இப்பகுதி நிலங்களில் படிந்துள்ள வண்டல் மண் படிவங்கள் பொங்கல் கரும்பு விளைச்சலுக்கு உகந்ததாக உள்ளது. எனவே மேலூர் பகுதியில் விளையும் பொங்கல் கரும்புகள் நல்ல இனிப்பு சுவையுடனும், தடிமனாகவும் இருக்கின்றன. பல்லவராயன்பட்டி, சூரகுண்டு, கல்லம்பட்டி, சுக்காம்பட்டி, எட்டிமங்கலம், நாவினிப்பட்டி, கீழையூர், தனியாமங்கலம், சருகுவலையபட்டி, மட்டங்கிபட்டி, கோட்டநத்தான்பட்டி, கொட்டகுடி, திருவாதவூர் உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் கரும்புகள் பயிரிடப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு மழை பெய்து தண்ணீர் வசதி இருந்ததால் அதிகஅளவு கரும்புகள் பயிரிடப்பட்டுள்ளன. பொங்கல் விழாவை வட இந்திய மாநிலங்களில் சங்கராந்தி விழாவாக கொண்டாடுகின்றனர். இந்த விழாவுக்கு மேலூர் கரும்புகளை வெளி மாநில வியாபாரிகள் போட்டிபோட்டு வாங்கிசெல்வது ஆண்டுதோறும் வழக்கமாக உள்ளது. குஜராத், புதுடெல்லி , மராட்டியம், மேற்கு வங்கம், ஆந்திரா மற்றும் வெளி மாநிலங்களுக்கு மேலூரில் இருந்து லாரிகளில் பொங்கல் கரும்புகள் ஏற்றுமதியாகின்றன. இதற்காக வியாபாரிகள் மேலூரில் முகாமிட்டு லாரிகளில் ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

இதுகுறித்து திருவாதவூரை சேர்ந்த கரும்பு விவசாயி சின்னக்கருப்பன் கூறியதாவது:- 15 கரும்புகள் ஒரு கட்டில் இருக்கும். இவ்வாறாக 20 கரும்பு கட்டுகள் ஒரு மாட்டுவண்டி எனவும், சாதாரண லாரி ஒன்றுக்கு 15 மாட்டு வண்டிகள் கரும்புகள் , நீளமான டாரஸ் லாரிக்கு 25 மாட்டுவண்டிகள் கரும்புகள் என கரும்புகள் மதிப்பீடு செய்து விற்கப்படுகின்றன. கடந்த ஆண்டு 300 கரும்புகள் ரூ.6000-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு ரூ. 5,000 முதல் ரூ. 5,800 வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை குறைந்து விட்டது என கவலையுடன் தெரிவித்தார். மேலூர் பகுதியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு லாரிகளில் கரும்புகள் ஏற்றுமதி தீவிரம் அடைந்துள்ளது.

Next Story