சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் குழந்தையை கடத்திய வடமாநில வாலிபர் திண்டுக்கல்லில் கைது


சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் குழந்தையை கடத்திய வடமாநில வாலிபர் திண்டுக்கல்லில் கைது
x
தினத்தந்தி 13 Jan 2020 11:00 PM GMT (Updated: 13 Jan 2020 8:35 PM GMT)

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் குழந்தையை கடத்திய வடமாநில வாலிபரை திண்டுக்கல்லில் ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல், 

மும்பை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவில்லா பெட்டியில் குழந்தையுடன் வடமாநில வாலிபர் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அப்போது ரெயிலில் வந்த சக பயணிகளுக்கு அவர் குழந்தையை கடத்தி செல்லும் கும்பலை சேர்ந்தவராக இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. 

இதனால் பயணிகள் திண்டுக்கல் ரெயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இந்தநிலையில் ரெயில் நேற்று இரவு 10.15 மணியளவில் திண்டுக்கல்லுக்கு வந்தது. இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், மேற்குவங்காள மாநிலம் மேற்கு மிதுனபூர் மாவட்டம் குல்ட்டிகிரி கிராமத்தை சேர்ந்த தீபக் மண்டல்(வயது 32) என்பதும், இவர் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து அந்த குழந்தையை கடத்தி வந்ததும் தெரியவந்தது. பின்னர் குழந்தை மீட்கப்பட்டது. இதுகுறித்து திண்டுக்கல் ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் வெளியான தகவல்கள் விவரம் வருமாறு:-

அசாம் மாநிலம் கவுகாத்தி அருகே ராகையா மாவட்டத்தை சேர்ந்தவர் அசார் அலி. இவருடைய மனைவி மெர்சினா (21). இவர்களுடைய பெண் குழந்தை ரசிதா (2). மெர்சினா வேலை விஷயமாக குழந்தையுடன் அசாமில் இருந்து சென்னை வந்தார். அப்போது சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் குழந்தை ரசிதாவை மர்ம நபர் கடத்தி சென்று விட்டார். இதுகுறித்து சென்னை சென்டிரல் ரெயில்வே போலீசில் மெர்சினா புகார் தெரிவித்தார். 


அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தீபக் மண்டல் குழந்தையை நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடத்தி வந்துள்ளார். இவ்வாறு தகவல்கள் வெளியானது. இதையடுத்து தீபக் மண்டலை திண்டுக்கல் ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.

Next Story