மயிலாடுதுறையில் வழிப்பறியில் ஈடுபட்ட ஆந்திர பெண்கள் 2 பேர் கைது


மயிலாடுதுறையில் வழிப்பறியில் ஈடுபட்ட ஆந்திர பெண்கள் 2 பேர் கைது
x
தினத்தந்தி 13 Jan 2020 10:15 PM GMT (Updated: 13 Jan 2020 9:40 PM GMT)

மயிலாடுதுறையில் வழிப்பறியில் ஈடுபட்ட ஆந்திர பெண்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை,

நாகை மாவட்டம் மயிலாடுதுறை பட்டமங்கல மேட்டு தெருவை சேர்ந்தவர் கல்யாணி (வயது 70). இவர் நேற்று முன்தினம் மயிலாடுதுறை கடைத்தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம் இருந்து ரூ.300-ஐ 2 பெண்கள் பறித்துவிட்டு தப்பி ஓட முயன்றனர்.

அப்போது அங்கு இருந்தவர்கள் அந்த 2 பெண்களையும் பிடித்து மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த பெண்களிடம் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் ஆந்திர மாநிலம் புத்தூரை சேர்ந்த ராஜு மனைவி அம்மு (25), வெற்றிவேல் மனைவி முத்துமாரி (23) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்மு, முத்துமாரி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இவர்கள் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இவர்கள் வழிப்பறி செய்த ரூ. 300-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story