இறைச்சி கடைக்காரரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து 10 பவுன் நகை கொள்ளை


இறைச்சி கடைக்காரரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து 10 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 13 Jan 2020 10:45 PM GMT (Updated: 13 Jan 2020 10:10 PM GMT)

வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து இறைச்சி கடைக்காரரிடம் 10 பவுன் நகையை கொள்ளையடித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

பூந்தமல்லி, 

சென்னை நெற்குன்றம், பல்லவன் நகர், பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்தவர் முகமது நூருல்லா(வயது 65). இவர், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இறைச்சி கடை வைத்து உள்ளார். நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டுக்கு காரில் 4 பேர் வந்தனர்.

அவர்களில் 2 பேர் சபாரி உடையும், 2 பேர் போலீஸ் சீருடையிலும் இருந்தனர். முகமது நூருல்லாவின் வீட்டுக்குள் அதிரடியாக புகுந்த அவர்கள், ‘நாங்கள் வருமான வரித்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள். நீங்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து உள்ளதாக புகார் வந்துள்ளது. உங்கள் வீட்டை சோதனை செய்யவேண்டும்’ என்றனர்.

உடனடியாக அவர்கள், முகமது நூருல்லா மற்றும் அவரது வீட்டில் இருந்தவர்களின் செல்போன்களை வாங்கி ‘சுவிட்ச் ஆப்’ செய்தனர். பின்னர் அவரது வீட்டில் சோதனை செய்வதுபோல் நடித்து, பீரோவில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தை எடுத்துக்கொண்டனர்.

பின்னர் அவர்கள், இதுகுறித்து வருமான வரித்துறை அலுவலகத்தில் வந்து உரிய ஆவணங்களை காட்டி, கையெழுத்து போட்டு பெற்றுக்கொள்ளும்படி கூறிவிட்டு அங்கிருந்து அவசர, அவசரமாக புறப்பட்டு செல்ல முயன்றனர்.

அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த முகமது நூருல்லா, இதுபற்றி அவர்களிடம் கேள்வி எழுப்பினார். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால், முகமதுநூருல்லா அந்த கும்பலை மடக்கிப்பிடித்தார்.

உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றனர். அவர்களை தடுத்த முகமது நூருல்லாவை அந்த கும்பல் சரமாரியாக தாக்கியது. ஆனாலும் அவர்களில் ஒருவரை தப்ப விடாமல் பிடித்தார். இதனால் அந்த நபர் தனது சட்டையை கழற்றிவிட்டு காரில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றுவிட்டனர்.

அதன்பிறகுதான் வந்தவர்கள், வருமான வரித்துறை அதிகாரிகள் இல்லை. அவர்கள்போல் நடித்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது. இதுகுறித்து கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Next Story