பொங்கல் பண்டிகையையொட்டி பென்னாகரம் வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை படுஜோர்


பொங்கல் பண்டிகையையொட்டி பென்னாகரம் வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை படுஜோர்
x
தினத்தந்தி 14 Jan 2020 10:30 PM GMT (Updated: 14 Jan 2020 6:45 PM GMT)

பொங்கல் பண்டிகையை யொட்டி பென்னாகரம் வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை படுஜோராக நடைபெற்றது.

பென்னாகரம்,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் சந்தை தோப்பு என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் வாரச்சந்தை கூடுவது வழக்கம். இந்த சந்தைக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள், பொதுமக்கள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருவார்கள். மலைப்பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் ஆடுகளுக்கு வியாபாரி களிடையே நல்ல வரவேற்பு உள்ளதால் இந்த சந்தைக்கு ஈரோடு, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து ஆடுகளை வாங்கி செல்கின்றனர்.

இந்தநிலையில் நேற்று பென்னாகரத்தில் வாரச் சந்தை கூடியது. பொங்கல் பண்டிகையை யொட்டி அதிகாலை முதலே விவசாயிகள், பொதுமக்கள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். நேற்று கூடிய சந்தைக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செம்மறி, வெள்ளாடுகள் விற்பனைக்காக கொண்டு வந்து இருந்தனர். எடைக்கு ஏற்றார் போல் ஒரு ஆடு ரூ.2 ஆயிரத்தில் இருந்து அதிக பட்சமாக ரூ.15 ஆயிரம் வரை விலை போனது.

பானைகள் விற்பனை

இந்த ஆடுகளை வியாபாரிகள், பொதுமக்கள் போட்டி போட்டு விலை கேட்டதால் ஆடுகளின் விற்பனை படுஜோராக நடைபெற்றது. வழக்கத்தை விட நேற்று அதிக விலைக்கு ஆடுகள் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பொங்கல் பண்டிகையையொட்டி கால்நடைகளுக்கு தேவையான கயிறுகள், வண்ணப்பொடி, கழுத்து மணி ஆகியவை விற்பனை படுஜோராக நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

இதேபோன்று கடத்தூரில் பொங்கல் பண்டிகையை யொட்டி பானைகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. சாலையோரம் போடப்பட்ட கடைகளில் பொதுமக்கள், விவசாயிகள் பானைகளை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். மேலும் அவரை, பூசணி உள்ளிட்ட காய்கறிகளையும் பொது மக்கள் வாங்கி சென்றனர்.

Next Story