தொழிலாளி அடித்துக்கொலை; சிறுவன் உள்பட 5 பேர் கைது


தொழிலாளி அடித்துக்கொலை; சிறுவன் உள்பட 5 பேர் கைது
x
தினத்தந்தி 14 Jan 2020 9:30 PM GMT (Updated: 14 Jan 2020 6:52 PM GMT)

ஜெயங்கொண்டம் அருகே தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறுவன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜெயங்கொண்டம், 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலூர் கிராமம் நடுதெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன் ரவி(வயது 41). கூலி தொழிலாளியான இவர் நேற்று அதே பகுதியை சேர்ந்த கலியபெருமாள் மகன் கொளஞ்சி(44) என்பவர் வீட்டிற்கு சென்று அவரது மனைவி சுசீலாவிடம் பேசிக்கொண்டிருந்தார். 

அப்போது அங்கு வந்த கொளஞ்சிக்கும், ரவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டு கொளஞ்சி குடும்பத்தினர் ரவியை தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ரவியை அவரது உறவினர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து தகவலறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து, கொளஞ்சி, உறவினர் ராயர்(65), இவரது மகன் ரமேஷ்(25), முத்தையன்(24) மற்றும் 15 வயதுடைய ஒரு சிறுவன் உள்பட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story