முட்டுக்கட்டைகள் நீங்கி மாநிலத்திற்கு வளர்ச்சி கிடைக்கும் பொங்கல் வாழ்த்து செய்தியில் நாராயணசாமி நம்பிக்கை


முட்டுக்கட்டைகள் நீங்கி மாநிலத்திற்கு வளர்ச்சி கிடைக்கும் பொங்கல் வாழ்த்து செய்தியில் நாராயணசாமி நம்பிக்கை
x
தினத்தந்தி 14 Jan 2020 11:00 PM GMT (Updated: 14 Jan 2020 10:33 PM GMT)

தைத்திங்கள் பிறப்பில் முட்டுக்கட்டைகள் நீங்கி மாநிலத்திற்கு வளர்ச்சி கிடைக்கும் என்று பொங்கல் வாழ்த்து செய்தியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி, 

தைத்திங்கள் பிறப்பில் முட்டுக்கட்டைகள் நீங்கி மாநிலத்திற்கு வளர்ச்சி கிடைக்கும் என்று பொங்கல் வாழ்த்து செய்தியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதல்-அமைச்சர் நாராயணசாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

அறுவடை திருநாள்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நம் புதுச்சேரி அரசு இலவச அரிசி திட்டத்தினை செயல்படுத்தி வருவது மூலமாக பசிப்பிணி அகற்றப்படுவதுடன் விவசாயிகளுக்கும் நன்மை கிடைக்கிறது. இத்திட்டத்தின்கீழ் நெல், அரிசியினை கொள்முதல் செய்யும்போது நெல் பயிரிட்ட விவசாயிகளுக்கு பலன் கிடைக்கிறது. ஆனால் மக்களின் விருப்பத்திற்கு மாறாக அரிசிக்கு பதிலாக பணம் கொடுக்க நிர்ப்பந்திப்பதால் தற்போது புதுச்சேரியில் அரிசிக்கு பதில் பணம் வழங்கப்படுகிறது.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நமது பழமொழி. எனவே இந்த தைத்திங்கள் பிறப்பு முட்டுக்கட்டைகளை நீக்கி, நம் மாநிலத்திற்கு வளர்ச்சியினையும், மக்களுக்கு செழிப்பினையும் நிச்சயம் அளிக்கும். இந்த தைத்திருநாளில் புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

ரங்கசாமி

என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமி விடுத்துள்ள செய்தியில், அனைத்து தரப்பு மக்களும் எல்லா நலமும், வளமும் பெற்று வாழ வேண்டும். நாட்டில் வளமும், மகிழ்ச்சி, வேளாண்மை மற்றும் சகோதரத்துவம் செழிக்கவேண்டும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதுபோல் இந்தாண்டு இனிமையான மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் மக்களுக்கு அளிக்க எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

அன்பழகன்

அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள செய்தியில், மனித சமுதாயத்திற்கு உணவளிக்கும் விவசாயிகளை ஊக்குவிக்கவேண்டியது நமது கடமையாகும். விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் துயரம் அளிக்கும் ஆட்சியாளர்களை அடையாளம் கண்டு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் அவர்களுக்கு தக்கபாடம் புகட்டும் விதத்தில் வெற்றிக்கு பாடுபட கழகத்தினர் அனைவரும் இப்பொங்கல் திருநாளில் சபதம் ஏற்போம் என்று கூறியுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் வேல்முருகன் விடுத்துள்ள செய்தியில், உலகில் எந்த நாகரிகத்திலும் இல்லாதவையான, விவசாயத்தை பாதுகாத்தல், விவசாய விலங்குகளை போற்றுதல், பெரியவர்கள் சொற்படி நடத்தல் என்பது தமிழ் சமுதாயத்தில் மட்டுமே உரிய ஒன்றாகும். இந்நன்னாளில் அனைவருக்கும் உள்ளம் கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

தே.மு.தி.க.

தே.மு.தி.க. மாநில செயலாளர் வி.பி.பி.வேலு விடுத்துள்ள செய்தியில், வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் நம் நாட்டின் தாரக மந்திரம். அதேபோல் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி இன்புற்று வாழ வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் புதுவை பிரதேச காங்கிரஸ் தலைவரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம், அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், எம்.பி.க்கள் வைத்திலிங்கம், கோகுலகிருஷ்ணன், தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் சஞ்சீவி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Next Story