ஈரோட்டில் நாளை 350 மாடுகள் பங்கேற்கும் கோலாகல ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகள் தீவிரம்


ஈரோட்டில் நாளை 350 மாடுகள் பங்கேற்கும் கோலாகல ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகள் தீவிரம்
x
தினத்தந்தி 16 Jan 2020 11:00 PM GMT (Updated: 16 Jan 2020 8:56 PM GMT)

ஈரோட்டில் நாளை (சனிக்கிழமை) கோலாகலமாக நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

ஈரோடு,

தமிழர்களின் வீர விளையாட்டாக ஜல்லிக்கட்டு உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. ஈரோடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் கடந்த ஆண்டு (2019) ஜல்லிக்கட்டு விழா நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து 2-வது ஆண்டாக ஈரோடு ஜல்லிக்கட்டு இந்த ஆண்டும் சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஈரோடு பெருந்துறை ரோடு பவளத்தாம்பாளையத்தில் உள்ள ஏ.ஈ.டி. பள்ளிக்கூட மைதானத்தில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

ஜல்லிக்கட்டு விழா நாளை (சனிக்கிழமை) காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. விழாவுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்குகிறார். அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, கே.சி.கருப்பணன், உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைக்கிறார்கள். எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், தோப்பு என்.டி.வெங்கடாசலம், எஸ்.ஈஸ்வரன், ராஜா என்கிற ராஜாகிருஷ்ணன், கே.எஸ்.தென்னரசு, வி.பி.சிவசுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்தி கணேசன், மாவட்ட வருவாய் அதிகாரி ச.கவிதா, ஆர்.டி.ஓ. முருகேசன், மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், ஏ.ஈ.டி. பள்ளி தாளாளர் காசியண்ணன், வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர், சக்தி மசாலா நிறுவன நிர்வாக இயக்குனர்கள் பி.சி.துரைசாமி, சாந்தி துரைசாமி உள்பட ஏராளமானவர்கள் விழாவில் பங்கேற்கிறார்கள். ஈரோடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் மோகன், செயலாளர் டாக்டர் ரகுநாத் ஆகியோர் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

350 மாடுகள்

ஜல்லிக்கட்டு விழாவில் 300 வீரர்கள் மாடு பிடிக்க தங்கள் பெயர்களை பதிவு செய்து உள்ளனர். 350 மாடுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மாடு பிடி வீரர்கள் ஏறு தழுவுவதற்காக மிகவும் பாதுகாப்பான மைதானம் தயார் செய்யப்பட்டு உள்ளது. இதுபோல் வாடிவாசல் உறுதியாக அமைக்கப்பட்டு வருகிறது. பார்வையாளர்களுக்காக கேலரிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. ஈரோடு ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்று வெற்றி பெறும் வீரர்கள், மாடுகளுக்கு ‘தினத்தந்தி’ சார்பில் மொத்தம் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்படுகிறது.

விழா ஏற்பாடுகள் குறித்து ஈரோடு ஜல்லிக்கட்டு -2020 ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கே.சுதாகர் கூறியதாவது:-

ஈரோடு ஜல்லிக்கட்டு அரசின் நடைமுறை விதிகளுக்கு ஏற்ப முறைப்படி நடக்கிறது. இங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு உள்ளனர்.

அவர்களின் ஆலோசனையின் பேரில் உரிய மாற்றங்கள் செய்யப்பட்டு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன.

மாடுகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் உரிய மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே மைதானத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். தமிழர்களின் வீரத்தையும், பாரம்பரியத்தையும் போற்றி பாதுகாக்கும் வகையில் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு நமது ஈரோட்டிலும் நடத்தப்படுகிறது.

இதுபோல் நமது பாரம்பரிய மாட்டு இனமான காங்கேயம் காளைகளின் வலிமையையும், சிறப்பையும் வெளிப்படுத்தும் வகையிலும், மாடு வளர்க்கும் விவசாயிகள், மாடுபிடி பயிற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்திலும் ஈரோடு ஜல்லிக்கட்டு நடக்கிறது.

இந்த முறை பார்வையாளர்கள் வசதிக்காக கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஜல்லிக்கட்டு சிறப்பு அனுமதி சீட்டுகள் பெற்று இருப்பவர்கள் அனைவரும் கொங்கு கலை அறிவியல் கல்லூரி பகுதியில் வாகனங்களை நிறுத்தி விட்டு எளிதாக மாடுபிடி மைதானத்துக்கு வர வழி அமைக்கப்பட்டு இருக்கிறது. பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் ஏ.ஈ.டி. பள்ளி முதன்மை நுழைவுவாயில் வழியாக உள்ளே செல்ல வழி அமைக்கப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்களின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட்டு உள்ள ஏற்பாடுகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டுகிறோம்.

இவ்வாறு டாக்டர் கே.சுதாகர் கூறினார்.

Next Story