மாட்டுப்பொங்கலையொட்டி திருவந்திபுரம் கெடிலம் ஆற்றில் மஞ்சு விரட்டு நிகழ்ச்சி


மாட்டுப்பொங்கலையொட்டி திருவந்திபுரம் கெடிலம் ஆற்றில் மஞ்சு விரட்டு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 16 Jan 2020 11:00 PM GMT (Updated: 16 Jan 2020 9:21 PM GMT)

மாட்டுப் பொங்கலையொட்டி திருவந்திபுரம் கெடிலம் ஆற்றில் நேற்று மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

நெல்லிக்குப்பம்,

கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றான இக்கோவிலில் பொங்கல் பண்டிகையையொட்டி தேவநாத சுவாமி மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

இந்நிலையில் மாட்டுப்பொங்கலையொட்டி நேற்று அதிகாலை 3.30 மணிக்கு கோவிலில் விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. இதை தொடர்ந்து ஆண்டாள் மற்றும் நாச்சியாருடன் தேவநாதசுவாமி கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து உற்சவர் கெடிலம் ஆற்றில் எழுந்தருளியதும், அங்கு தீர்த்தவாரி நடைபெற்றது.

பரிவேட்டை

பின்னர், மாலையில் தேவநாத சுவாமி வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பரிவேட்டைக்காக திருவந்திபுரம் கெடிலம் ஆற்றுக்கு புறப்பட்டார். சாமிக்கு முன்பாக நாதஸ்வர கலைஞர்கள் நாதஸ்வரம் வாசிக்க, பட்டர்கள் வேத பாராயணம் பாடிக்கொண்டு சென்றனர். பின்னர் தேவநாதசுவாமி கெடிலம் ஆற்றில் இறங்கினார்.

அப்போது திருவந்திபுரம் சாலக்கரை, கே.என்.பேட்டை, பாதிரிக்குப்பம், பில்லாலி தொட்டி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் தாங்கள் வளர்த்து வரும் பசு மற்றும் காளை மாடுகளை அலங்கரித்து ஆற்றுக்குள் கொண்டு வந்தனர். இதைத் தொடர்ந்து தேவநாதசுவாமி குதிரை வாகனத்தில் இருந்தபடி அங்கிருந்த மாடுகளை 3 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மஞ்சுவிரட்டு

பின்னர் தேவநாதசுவாமி ஆற்றின் மறுகரைக்கு சென்று பரிவேட்டை ஆடினார். மாலை 5 மணிக்கு மாடுகளை விரட்டும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அனைத்து மாடுகளும் ஆற்றின் கரையை நோக்கி ஓடின. இதனை ஆற்றங்கரையிலும், பாலத்தின் மேலே நின்றபடியும் ஏராளமான பொது மக்கள் பார்த்து ரசித்தனர்.

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி முடிந்ததும் தேவநாதசுவாமி ஆற்றங்கரை மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திருவந்திபுரத்தில் சாமி வீதிஉலா நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். 

Next Story