ஆரணி அருகே, புதுமண தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை


ஆரணி அருகே, புதுமண தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 18 Jan 2020 11:15 PM GMT (Updated: 18 Jan 2020 7:10 PM GMT)

ஆரணி அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆரணி,

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் யாதமரி மண்டலம் கொத்திவாலு கிராமத்தை சேர்ந்தவர் கணபதி. இவருடைய மகன் தேவராஜ் (வயது 22), கார் டிரைவர். அதே கிராமத்தை சேர்ந்தவர் காயத்ரி (19). இருவரும் காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பெங்களூருவில் தனியாக வீடு எடுத்து இருவரும் வசித்து வந்தனர்.

பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கஸ்தம்பாடியில் உள்ள காயத்ரியின் உறவினர் வீட்டுக்கு தேவராஜ், காயத்ரி இருவரும் சில நாட்களுக்கு முன்பு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தேவராஜ், காயத்ரி ஆகியோர் வீட்டின் அருகே உள்ள ஒரு மரத்தில் ஒரே சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். நேற்று அதிகாலை உறவினர்கள் இருவரும் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த களம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து குடும்பத்தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது கடன் தொல்லை காரணமா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுமண தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story