மத்திய அரசிடம் இருந்து ரூ.54 ஆயிரம் கோடி தமிழகத்துக்கு வராததால், வளர்ச்சி பணிகள் பாதிப்பு


மத்திய அரசிடம் இருந்து ரூ.54 ஆயிரம் கோடி தமிழகத்துக்கு வராததால், வளர்ச்சி பணிகள் பாதிப்பு
x
தினத்தந்தி 19 Jan 2020 10:45 PM GMT (Updated: 19 Jan 2020 4:13 PM GMT)

மத்திய அரசிடம் இருந்து ரூ.54 ஆயிரம் கோடி தமிழகத்துக்கு வராததால், வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது என்று வசந்தகுமார் எம்.பி. குற்றம்சாட்டி உள்ளார்.

நாகர்கோவில்,

மத்திய அரசு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிப்பதால், தமிழகத்துக்கு வரவேண்டிய ரூ.54 ஆயிரம் கோடி வரவில்லை இதனால் பல வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக குமரி மாவட்டத்தில் 4 வழிச்சாலை பணிகள் முடங்கியுள்ளது. குமரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் மிக மோசமான நிலையில் இருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மார்த்தாண்டம் முதல் காவல்கிணறு வரை உள்ள சாலையை சீரமைக்க ரூ.47 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. எனினும் இன்னும் சாலை சீரமைக்கப்படாமல் கிடப்பில் உள்ளது.

தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் எந்தவித பிரச்சினையும் இல்லை. ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார். ஆனால் அவருக்கு பயமும் இருக்கிறது. இருவேறு நிலையில் அவர் தவித்து வருகிறார். எங்களை பொறுத்தவரை ரஜினிகாந்த் எங்கள் கூட்டணியில் இணைய வேண்டும். கமல் வந்தாலும் கூட ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம். எங்களை பொறுத்தவரை தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நல்லாட்சி அமைய வேண்டும். எங்கள் கூட்டணிக்கு யார் வந்தாலும் முதல்-அமைச்சர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின் என்பதில் எந்த மாற்றமும் இருக்காது.

ஆலோசனை

மத்திய அரசு தற்போது நிதி மந்திரியை மாற்ற போவதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் நிதி மந்திரியை மாற்றினாலும் மக்களுக்கு பலன் அளிக்காது. பிரதமர் நரேந்திரமோடியும், அமித்ஷாவும் சொல்வதை தான் நிதி மந்திரி கேட்க முடியும். முதலில் பொருளாதார வல்லுனர்களுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். தேவைப்பட்டால் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ஆலோசனை கேட்டு நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து காப்பாற்ற முன்வரவேண்டும்.

குமரி மாவட்டத்தில் அரசு அதிகாரிகள் மத்திய-மாநில அரசுகளின் கீழ் பணியாற்றுவது போல் தெரியவில்லை. அரசியல் வாதிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.

வேலைவாய்ப்பு முகாம்

குமரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. எனது மாத சம்பளம் ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை ஏழை மாணவ-மாணவிகளின் கல்வி நலனுக்காக செலவழித்து வருகிறேன். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் நோயாளிகளின் நலனுக்காக ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியிலும் குடிநீர் சுத்திகரிப்பு கருவி அமைக்கப்பட்டு இருக்கிறது.

வசந்த் அன்கோ சார்பில் பிப்ரவரி 2-ந் தேதி தக்கலை நூருல் இஸ்லாம் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இந்த முகாமில் 30-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story