திருப்பூரில் வாலிபர் கொடூரமாக வெட்டிக்கொலை கைகள் கட்டப்பட்ட நிலையில் பிணம் மீட்பு


திருப்பூரில் வாலிபர் கொடூரமாக வெட்டிக்கொலை கைகள் கட்டப்பட்ட நிலையில் பிணம் மீட்பு
x
தினத்தந்தி 19 Jan 2020 11:15 PM GMT (Updated: 19 Jan 2020 8:23 PM GMT)

திருப்பூரில் காட்டுப்பகுதியில் வாலிபர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். கைகள் கட்டப்பட்ட நிலையில் பிணத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருப்பூர்,

திருப்பூர் பட்டுக்கோட்டையார் நகரை சேர்ந்தவர் அருமைதம்பி (வயது 60). இவருடைய மகன் அருண்குமார்(23). இவர் அந்தப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

கடந்த 17-ந் தேதி இரவு வீட்டில் இருந்த அருண்குமார் தனது நண்பர் அழைப்பதாக பெற்றோரிடம் கூறிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவருடைய பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடினார்கள். நண்பர்களுடன் வெளியூர் சென்றிருப்பார் என்று விட்டு விட்டனர்.

வெட்டிக்கொலை

இந்த நிலையில் நேற்று காலை வெள்ளியங்காடு ஈஸ்வரமூர்த்தி நகர் பூளைத்தோட்டம் பகுதி முள்காட்டுக்குள் அருண்குமார் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். துர்நாற்றம் வீசியதால் அந்த பகுதியில் உள்ளவர்கள் அருண்குமார் பிணத்தை பார்த்து உடனடியாக திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். தெற்கு போலீஸ் உதவி கமிஷனர் நவீன்குமார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.

கைகள் கட்டப்பட்டு இருந்தது

அருண்குமாரின் கைகள் கயிற்றால் கட்டப்பட்டு இருந்தது. சத்தம் போடாமல் இருப்பதற்காக அவருடைய வாய்க்குள் துணி திணிக்கப்பட்டு இருந்தது. கழுத்து, வாய், நெற்றி, பின்னந்தலையில் பல இடங்களில் அரிவாளால் கொடூரமாக வெட்டப்பட்ட காயங்கள் இருந்தன.

மார்பு, வயிறு, முதுகு உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. அத்துடன் அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதனால் கொலை செய்யப்பட்டு பல மணி நேரம் ஆகியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அருண்குமாரின் மோட்டார் சைக்கிள் மற்றும் அவருடைய செல்போன் ஆகியவற்றை காணவில்லை.

தடயங்கள் சேகரிப்பு

அருண்குமார் கொலை செய்யப்பட்ட இடத்தில் மது பாட்டில்கள் மற்றும் கஞ்சா புகைத்ததற்கான அறிகுறிகள் காணப்பட்டன. சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் ‘ஹண்டர்’ வரவழைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்த நாய், வெள்ளியங்காடு மெயின் ரோடு வரை ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. தடயவியல் நிபுணர்களும் வந்து சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.

கொலையான இடத்துக்கு யாரும் எளிதில் செல்ல முடியாத வகையில் முள்காட்டு பகுதி உள்ளது. அதற்குள் ஓரிடத்தில் கும்பலாக அமர்ந்து மது அருந்தும் வகையில் செடிகளை வெட்டி சுத்தம் செய்யப்பட்டு இருந்தது.

திட்டமிட்டு கொலை

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அருண்குமார் தனது நண்பர்களுடன் சுற்றித்திரிந்து வந்துள்ளார். செல்போனில் யாருடனோ அடிக்கடி பேசியபடி இருந்துள்ளார். இதனால் பெண் விவகாரத்தில் அவரை தனியாக அழைத்துச்சென்று கைகளை கட்டி கொடூரமாக வெட்டிக் கொலை செய்தார்களா?, இ்ல்லை நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் அவர் கொல்லப்பட்டரா? என்ற கோணத்தில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர்.

முன்கூட்டியே திட்டமிட்டு இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். காட்டுப்பகுதியில் வாலிபர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story