கர்ப்பிணி மீது தாக்குதல்; உறவினர்கள் சாலை மறியல்


கர்ப்பிணி மீது தாக்குதல்; உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 19 Jan 2020 10:45 PM GMT (Updated: 19 Jan 2020 10:22 PM GMT)

விருத்தாசலம் அருகே கர்ப்பிணியை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம்,

விருத்தாசலம் அருகே உள்ள கார்குடல் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியசீலன்(வயது 22). இவருடைய மனைவி கிருஷ்ணவேணி (21). 7 மாத கர்ப்பிணியான இவரையும், சத்தியசீலனையும் முன்விரோதம் காரணமாக அதே ஊரை சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பல் தாக்கியது. இதில் படுகாயமடைந்த இருவரும், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், கர்ப்பிணியை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி கடந்த 2 நாட்களுக்கு முன்பு விருத்தாசலம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், நடவடிக்கை எடுப்பதாக கூறினர். ஆனால் ஒருவரை மட்டும் போலீசார் விசாரணைக்கு அழைத்துச்சென்று, விடுவித்தனர்.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் நேற்று கார் குடல் பஸ் நிறுத்தத்தில் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள், விருத்தாசலம்-பரங்கிப்பேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள், போலீசாரை கண்டித்தும், கர்ப்பிணியை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்யக்கோரியும் கோஷமிட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை கலைத்தனர். இருப்பினும் இந்த போராட்டத்தால் அந்த சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story