சாவிலும் இணை பிரியாத தம்பதி - மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் சாவு


சாவிலும் இணை பிரியாத தம்பதி - மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் சாவு
x
தினத்தந்தி 19 Jan 2020 11:02 PM GMT (Updated: 19 Jan 2020 11:02 PM GMT)

சென்னை வண்ணாரப்பேட்டையில் மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

பெரம்பூர், 

சென்னை வண்ணாரப்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் லோக நாராயணன்(வயது 65). இவர், சென்னை மாநகராட்சியில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி ராஜேஸ்வரி(62).

இவர்களுக்கு 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். லோக நாராயணன் தனது மனைவி ராஜேஸ்வரியுடன் இந்த வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ராஜேஸ்வரிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அதே பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீட்டுக்கு வந்தார். பின்னர் இரவில் கணவன்-மனைவி இருவரும் சாப்பிட்டுவிட்டு தூங்கினர்.

அதிகாலையில் எழுந்த லோக நாராயணன், மனைவிக்கு பால் கொடுக்க முயன்றார். நீண்டநேரம் எழுப்பியும் ராஜேஸ்வரி எழுந்திருக்கவில்லை. அவர் இறந்துவிட்டது தெரிந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த லோக நாராயணனும், மனைவி மீது சரிந்து விழுந்து பரிதாபமாக இறந்தார். நீண்டநேரம் ஆகியும் கணவன்-மனைவி இருவரும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி அவர்களின் மகன்களுக்கு தகவல் கொடுத்தனர்.

அவர்கள் வீட்டுக்கு வந்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். வீட்டின் உள்ளே தங்களது தாயும், தந்தையும் ஒரே நேரத்தில் இறந்து கிடப்பதை கண்டு கதறி அழுதனர்.

மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. சாவிலும் இணை பிரியாத தம்பதியின் உடலை பார்த்து உறவினர்கள், பொதுமக்கள் கண்ணீர் சிந்தினர்.

Next Story