டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் கையெடுத்து கும்பிடும் போராட்டம்


டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் கையெடுத்து கும்பிடும் போராட்டம்
x
தினத்தந்தி 20 Jan 2020 11:00 PM GMT (Updated: 20 Jan 2020 3:31 PM GMT)

கல்பாடியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில், அந்த கிராம பெண்கள் கையெடுத்து கும்பிடும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்த நிலையில் கல்பாடி கிராம பெண்கள் திரண்டு ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல், துணை தலைவர் புஷ்பராஜ் ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். அப்போது அவர்கள் எங்கள் கிராமத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடையை அகற்ற கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நூதன போராட்டமாக கலெக்டர் அலுவலகம் முன்பு கையெடுத்து கும்பிடும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அவர்களில் சிலர் கலெக்டர் சந்தாவை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில், எங்கள் கிராமத்தின் மையப்பகுதியில் உள்ள பால்பண்ணை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஆகியவற்றின் அருகே அரசு டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. டாஸ்மாக் கடையை கடந்து தான் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நூலகம், ரேஷன் கடை ஆகியவற்றிற்கு பொதுமக்கள் செல்ல வேண்டும்.

போனஸ் தொகை வழங்க வேண்டும்

தற்போது அந்த டாஸ்மாக் கடையில் மது குடிப்பவர்கள் குடி போதையில் அந்த வழியாக செல்லும் பெண்களை கேலி, கிண்டல் செய்கிறார்கள். மேலும் கணவன்மார்கள் வேலை செய்து கிடைத்த கூலியை வீட்டில் கொடுக்காமல் மதுபானம் குடித்து அழிக்கின்றனர். இதனால் குடும்பம் நடத்த முடியவில்லை, அடிக்கடி பிரச்சினை ஏற்படுகிறது. பள்ளி மாணவர்களும் குடி போதைக்கு அடிமையாகும் அபாயம் உள்ளது. எனவே கல்பாடி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இதேபோல் கல்பாடி கிராம பால் உற்பத்தியாளர்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், கல்பாடி கிராம பால் கூட்டுறவு சங்கத்தினர் பால் உற்பத்தியாளர்களுக்கு சேர வேண்டிய போனஸ் தொகையை வழங்கவும், 4 பேர் கொண்டு சென்ற பாலை திருப்பி அனுப்பப்பட்டதன் காரணம் குறித்து விசாரணை நடத்தவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 108 மனுக்களை கலெக்டர் சாந்தா பெற்று கொண்டார். அந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள், மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு கலெக்டர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதில், மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சக்திவேல், உதவி ஆணையர் (கலால்) ஷோபா உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story