குறைதீர்க்கும் நாள் கூட்டம்: இடுகாட்டு நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் மனு


குறைதீர்க்கும் நாள் கூட்டம்: இடுகாட்டு நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 20 Jan 2020 11:00 PM GMT (Updated: 20 Jan 2020 5:09 PM GMT)

கரூரில் நேற்று நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இடுகாட்டு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து இலவச வீட்டுமனைப்பட்டா, உதவித்தொகை மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக 165 கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு தெரியப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி உத்தரவிட்டார்.

ஆக்கிரமிப்புகள்

கரூர் மாவட்டம், கிழக்கு தவிட்டுப்பாளையம் வீரராஜபுரம் மற்றும் தர்மராஜபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், எங்கள் பகுதியில் உள்ள இடுகாட்டு நிலத்தை செங்கல்சூளை வைத்து சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய கொண்டு செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. எனவே அங்கு வருவாய் துறையினர் உரிய ஆய்வு மேற்கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இதேபோல் கல்லடை மந்தைகுளம், கீழவெளியூர் பெரியகுளம், மேலவெளியூர் செம்பகவுண்டர்குளம், சீரங்ககவுண்டர்குளம் உள்ளிட்டவற்றில் வீடு கட்டியும், விவசாயம் செய்தும் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே இது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு ஆக்கிரமிப்பினை அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட கமிட்டி உறுப்பினர் கல்லடையை சேர்ந்த அய்யர் அளித்த மனுவில் தெரிவித்திருந்தார்.

சிறுநீரக கோளாறால் மாணவன் அவதி

கிருஷ்ணராயபுரம் வட்டம் ரெங்கநாதபுரம் கிராமத்தில் ஆந்திராபொன்னி ரகம் நெல்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அறுவடைக்கு தயாராகி வருகிற வேளையில் நோய் தாக்குதலால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு கணக்கீடு செய்து நோய் தாக்குதலால் சேதம் அடைந்த நெற்பயிருக்கு இழப்பீடு வழங்கிட வேண்டும் என்று வீரராக்கியம் நீர்பாசன விவசாயிகள் சங்கத்தினர் அளித்த மனுவில் தெரிவித்து இருந்தனர்.

கிருஷ்ணராயபுரம் வட்டம் மேட்டுதிருக்காம்புலியூரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் பிரசன்னா (வயது 10). இவன், அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வரும் இச்சிறுவன், மருத்துவ உதவி கேட்டு உறவினர்களுடன் மனு கொடுத்தான். அந்த மனுவில், நான் எனது தாயை இழந்து கடந்த 6 ஆண்டுகளாக பெரியம்மா வீட்டில் வசித்து வருகிறேன். தந்தை மனவளர்ச்சி குன்றியவர் ஆவார். இந்த நிலையில் சிறுநீரக கோளாறால் நீண்ட நாட்களாக பாதிக்கப்பட்டேன். சிறுநீரானது, சிறுநீரகங்கள் இருக்கும் இடத்தையொட்டி இடுப்பு பகுதியில் இருந்து வெளியேறி வருகிறது. இதனால் இடுப்பை சுற்றிலும் எப்போதும் துணி கட்டி இருக்க வேண்டியுள்ளது. எனவே சிறுநீரக கோளாறை சரி செய்ய மருத்துவ உதவிக்கு மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தான். மனுக்களை பெற்ற மாவட்ட வருவாய் அதிகாரி, இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மனுதாரர்களிடம் தெரிவித்தார்.

இதில், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் பாலசுப்ரமணியன், கலால் பிரிவு உதவி ஆணையர் மீனாட்சி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அதிகாரி லீலாவதி உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story