குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்


குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Jan 2020 11:00 PM GMT (Updated: 20 Jan 2020 7:28 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி தர்மபுரியில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

தி.மு.க. கூட்டணி கட்சிகள் மற்றும் சமூக நல்லிணக்க மேடை சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி தர்மபுரியில் நேற்று ஊர்வலம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தர்மபுரி வேல்பால் டிப்போ அருகில் இருந்து தொடங்கிய ஊர்வலத்திற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் இன்பசேகரன் எம்.எல்.ஏ., காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் கோவி.சிற்றரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணை செயலாளர் தமிழ்குமரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஜெயந்தி, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் தங்கராஜ், மனிதநேய மக்கள் கட்சி மாநில நிர்வாகி சாதிக்பாட்சா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகே வந்தடைந்தது. அங்கு குடியுரிமை சட்ட திருத்தத்தை ரத்து செய்யக்கோரி சமூக நல்லிணக்க மேடை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் குடியுரிமை சட்டதிருத்தத்தை நிறைவேற்றிய மத்திய அரசையும், அதற்கு ஆதரவளித்த மாநில அரசையும் கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பேசினார்கள்.

கோ‌‌ஷங்கள்

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய மக்களிடையே மத ரீதியாக பிளவை உருவாக்கும் குடியுரிமை சட்ட திருத்தத்தை உடனடியாக மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இந்தியாவின் பூர்வீக மக்களான 20 கோடி முஸ்லிம்களின் வாழ்வாதார உரிமைகளை பாதுகாக்க வேண்டும். இந்திய மக்களிடையே மதங்களை கடந்த ஒற்றுமையுணர்வை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். குடியுரிமை கணக்கெடுப்பின்போது ஆவணங்களை தரமாட்டோம் என்ற கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் அன்வர் பா‌ஷா, எஸ்.டி.பி.ஐ. மாவட்ட தலைவர் முகமது ஆசாத், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் தென்றல் யாசின், சி.பி.ஐ.எம்.எல். மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், அனைத்து கிறிஸ்தவ அமைப்பின் நிர்வாகி ஜேசுதாஸ், திராவிடர் கழக மாவட்ட செயலாளர் சிவாஜி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினார்கள். இதில் தி.மு.க. கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story