ஆத்தூர் அருகே, பெண் தூக்குப்போட்டு தற்கொலை - வீட்டு செலவுக்கு கணவர்-மகன்கள் பணம் கொடுக்காததால் சோக முடிவு
ஆத்தூர் அருகே வீட்டு செலவுக்கு கணவரும், மகன்களும் பணம் கொடுக்காமல் வீணாக செலவு செய்ததால் மனமுடைந்த பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆறுமுகநேரி,
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே புன்னக்காயல் பவுலா நகரைச் சேர்ந்தவர் ராஜ் (வயது 57). மீனவர். இவருடைய மனைவி ராஜகன்னி (52). இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
மூத்த மகனுக்கும், மகளுக்கும் திருமணமாகி விட்டது. மற்ற 2 மகன்களும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ராஜ் மற்றும் 2 மகன்களும் வீட்டு செலவுக்கு பணம் கொடுக்காமல் வீணாக செலவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த ராஜகன்னி நேற்று அதிகாலையில் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ ஆனந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
தற்கொலை செய்த ராஜகன்னியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story