கோவில் கதவை உடைத்து சிலைகளை திருட முயற்சி மர்ம மனிதர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


கோவில் கதவை உடைத்து சிலைகளை திருட முயற்சி மர்ம மனிதர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 20 Jan 2020 11:00 PM GMT (Updated: 20 Jan 2020 10:28 PM GMT)

புதுப்பேட்டை அருகே கோவில் கதவை உடைத்து சிலைகளை திருட முயன்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

புதுப்பேட்டை,

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த புதுப்பேட்டை அருகே சிறுவத்தூர் கிராமத்தில் மணலூர் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் வழக்கம் போல் பூஜைகள் முடிந்து இரவில் கோவில் நடை சாத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கோவில் வழியாக சென்ற போது, அங்கிருந்த இரும்பு கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் கோவில் முன்பு இருந்த சூலம் சேதமடைந்த நிலையில் இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது, அங்கு பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த ஐம்பொன் அய்யப்பசாமி சிலை, வெண்கல மாரியம்மன் சிலை ஆகியன வெவ்வேறு இடங்களில் தனித்தனியாக கிடந்தது.

போலீஸ் விசாரணை

இது பற்றி உடனடியாக புதுப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வம், தீபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பார்வையிட்டு கிராம மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதன் மூலம் இரவில் மர்ம மனிதர்கள் கோவில் பூட்டை உடைத்து ஐம்பொன் மற்றும் வெண்கல சாமி சிலைகளை திருட முயன்ற போது, அந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் இருந்ததால், சிலைகளை அங்கேயே போட்டு விட்டு தப்பி சென்று இருக்கலாம் என்பது தெரியவந்தது. இதனிடையே கடலூரில் இருந்து மோப்பநாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. அது, சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்த படி, சிறிது தூரம் ஓடிப்போய் நின்றுவிட்டது. மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு வந்து, அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்து சென்றனர்.

வலைவீச்சு

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிலைகளை திருட முயன்ற மர்ம மனிதர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி, அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Next Story