போலீசாருக்கு விளையாட்டு போட்டிகள்: போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் நடவடிக்கை


போலீசாருக்கு விளையாட்டு போட்டிகள்: போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் நடவடிக்கை
x
தினத்தந்தி 20 Jan 2020 10:58 PM GMT (Updated: 20 Jan 2020 11:35 PM GMT)

போலீசாரின் மன அழுத்தத்தை போக்க போலீசாருக்கான விளையாட்டு போட்டிகளை நடத்த போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் நடவடிக்கை எடுத்தார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை மேம்படுத்த போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்தி கணேசன் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதிலும், குற்ற நடவடிக்கைகளை கண்காணித்து கட்டுப்படுத்துவதிலும் அவர் தீவிரம் காட்டி வருகிறார்.

முதியவர்கள், பெண்கள் தொடர்பான புகார்களை போலீசார் விரைந்து முடித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் ‘ஹலோ சீனியர்ஸ், லேடீஸ் பர்ஸ்ட்’ என்ற திட்டங்களை செயல்படுத்தி பொதுமக்களின் பாராட்டினை பெற்று இருக்கிறார். இதுபோல் ஆம்புலன்சுகளில் கொண்டு செல்லப்படும் நோயாளிகளின் உயிர் பாதுகாப்பு நடவடிக்கையாக ‘எக்ஸ்பிரஸ் காரிடார்’ என்ற விரைவுப்பாதை திட்டத்தால் உயிரிழப்புகள் நடைபெறுவதை தடுக்கும் திட்டமும் ஈரோட்டில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இந்த திட்டங்களை வரவேற்று உள்ளனர்.

பொதுமக்களுக்கு மட்டுமின்றி, ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றும் பெண் போலீசாருக்கும் வாரத்தில் ஒருநாள் விடுமுறை என்ற திட்டத்தையும் அமல்படுத்தி இருக்கிறார்.

இந்த விடுமுறையை பெண் போலீசார் முறையாக பயன்படுத்திக்கொள்கிறார்களா? என்றும் கண்காணித்து வருகிறார். பள்ளிக்கூட விடுமுறையின்போது பெண் போலீசார் தங்கள் குழந்தைகளை தங்களுடன் நிலையங்களிலேயே வைத்துக்கொள்ளவும் அனுமதித்து பெண் போலீசாரின் பாராட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன் பெற்று இருக்கிறார்.

தற்போது போலீசாரின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் விளையாட்டு போட்டி திட்டத்தை அவர் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

அதன்படி நேற்று ஈரோடு ஆனைக்கல்பாளையத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடந்த பல்வேறு விளையாட்டு போட்டிகளில் ஈரோடு டவுன் உள்கோட்ட போலீஸ் நிலையங்களை சேர்ந்த ஆண்-பெண் போலீசார், போலீஸ் அதிகாரிகள், ஆயுதப்படை போலீசார் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, ‘கல்லூரி, பள்ளிக்கூட காலங்களுக்கு பிறகு மன மகிழ்ச்சியாக விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது மிக மகிழ்ச்சியாக இந்த விளையாட்டில் பங்கேற்று இருக்கிறோம்’ என்றார்கள்.

ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பன்னீர்செல்வன், பாலமுருகன், சுப்புரத்தினம் உள்ளிட்டோர் இந்த விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன் கூறியதாவது:-

ஈரோடு ஆயுதப்படை போலீசாருக்கு வருடாந்திர கவாத்து பயிற்சி வழக்கமாக நடைபெறும். இந்த ஆண்டு அதை மேம்படுத்தும் வகையில் ஆயுதப்படை வீரர்களுடன், போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், ஆண்-பெண் போலீசாரையும் ஈடுபடுத்த திட்டமிட்டேன். அதன்படி ஆயுதப்படையில் உள்ள 60 போலீசார் கொண்ட 7 பிரிவுகளில் மொத்தம் 420 பேர் இருக்கிறார்கள். இந்த 7 பிரிவுகள் மற்றும் மாவட்டத்தில் உள்ள துணைக்கோட்ட போலீசாருடன் இணைந்து கவாத்து பயிற்சி மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. 7 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் இந்த போட்டிகள் நடைபெறும். அதன்படி முதல் நாள் டவுன் துணைக்கோட்டத்தை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் உள்பட 62 போலீசாருடன் ஆயுதப்படை போலீசார் 60 பேரும் இணைந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

கவாத்து பயிற்சி, பொதுவான அறிவுரைகள், உடல் ஆரோக்கியம் குறித்தும், மன ஆரோக்கியம் குறித்தும் உரைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கோ-கோ, கபடி, இறகுபந்து உள்பட போலீசார் விரும்பும் விளையாட்டு போட்டிகளை குழுக்களாக பிரிந்து விளையாடினார்கள். இது அன்றாடம் இறுக்கமான சூழலில் பணியாற்றும் போலீசாருக்கு மன அழுத்தத்தை குறைக்கும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்தி கணசேன் கூறினார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) பவானி உட்கோட்ட போலீசாரும், ஆயுதப்படை 2-வது பிரிவு போலீசாரும் விளையாட்டு போட்டியில் பங்கேற்கிறார்கள்.


Next Story