பெரியாரை அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினி மீது போலீசில் புகார்


பெரியாரை அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினி மீது போலீசில் புகார்
x
தினத்தந்தி 21 Jan 2020 11:00 PM GMT (Updated: 21 Jan 2020 5:24 PM GMT)

பெரியாரை அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினி மீது போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.

ஈரோடு,

சென்னையில் நடந்த துக்ளக் இதழின் பொன்விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது முரசொலி நாளிதழ் மற்றும் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியதாக பல்வேறு அரசியல் கட்சியினரும் அவருக்கு எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் பெரியாரை அவதூறாக பேசியதாக கூறி தமிழகத்தின் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் பல்வேறு அரசியல் கட்சியினர் புகார் அளித்து வருகிறார்கள்.

பவானி

இந்த நிலையில் திராவிடர் விடுதலை கழக மாவட்ட செயலாளர் வேணுகோபால் தலைமையில் மாவட்ட தலைவர் ஜோதி, அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் வேல்முருகன், தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் வேங்கை பழனிசாமி உள்பட பலர் நேற்று பவானி போலீஸ் நிலையத்துக்கு வந்து இன்ஸ்பெக்டர் தேவேந்திரனிடம் புகார் மனு அளித்தனர். அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:-

கடந்த 14-ந் தேதி சென்னையில் நடந்த துக்ளக் பொன் விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து பொய்யான தகவலை தெரிவித்து உள்ளார். பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் வேண்டும் என்றே உள்நோக்கத்தோடு பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசிய நடிகர் ரஜினி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

சத்தியமங்கலம்

இதேபோல் சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் திராவிடர் விடுதலை கழக மாவட்ட அமைப்பாளர் பழனிச்சாமி தலைமையில் தமிழ் புலிகள் கட்சி, சமூக நீதிக்கட்சி, தலித் விடுதலை கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் புகார் மனு அளித்து உள்ளனர்.

ஏற்கனவே ஈரோடு மாவட்டத்தில் கோபி, அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் பெரியாரை அவதூறாக பேசிய நடிகர் ரஜினி மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story