சப்-இன்ஸ்பெக்டர் கொலை: பயங்கரவாதிகள் 2 பேருக்கும் 10 நாள் போலீஸ் காவல் நாகர்கோவில் கோர்ட்டு உத்தரவு


சப்-இன்ஸ்பெக்டர் கொலை: பயங்கரவாதிகள் 2 பேருக்கும் 10 நாள் போலீஸ் காவல் நாகர்கோவில் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 21 Jan 2020 11:15 PM GMT (Updated: 21 Jan 2020 5:47 PM GMT)

சப்-இன்ஸ்பெக்டர் கொலையில் கைதான பயங்கரவாதிகள் 2 பேருக்கும் 10 நாள் போலீஸ் காவலுக்கு அனுமதி அளித்த நாகர்கோவில் கோர்ட்டு உத்தரவிட்டது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் வில்சன் (வயது 57). இவர் கடந்த 8-ந் தேதி இரவு தமிழக- கேரள எல்லையில் களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர், வில்சனை துப்பாக்கியால் சுட்டும், வெட்டுக் கத்தியால் வெட்டியும் கொலை செய்தனர்.

இந்த கொலையில் ஈடுபட்டது பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்களும், குமரி மாவட்டம் திருவிதாங்கோடு அடப்புவிளை பதார் தெருவைச் சேர்ந்த அப்துல் சமீம் (வயது 29), நாகர்கோவில் கோட்டார் மாலிக் தினார் நகர் ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்த தவுபீக் (27) என்பது தெரிய வந்தது.

கைது

மேலும் போலீசாரால் தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகள் 2 பேரும் கர்நாடக மாநிலம் உடுப்பியில் பிடிபட்டனர். 2 பேரையும் கைது செய்த போலீசார் 16-ந் தேதி குமரி மாவட்டத்துக்கு அழைத்து வந்தனர். அன்று இரவு குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர்.

அன்றே போலீசார் போலீஸ் காவலுக்கு அனுமதி வழங்கக்கோரி போலீசார் மனு தாக்கல் செய்தனர். இருப்பினும் அவர்கள் 2 பேரையும் மீண்டும் 20-ந் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்த மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டிருந்தார்.

நீதிபதி முன்னிலையில் ஆஜர்

முதலில் அவர்கள் மீது கொலை, கொலை மிரட்டல், ஆயுதச்சட்டம் உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. பின்னர் கூடுதலாக சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டப்பிரிவின் (உபா) கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

உபா சட்டமும் அவர்கள் மீது பாய்ந்ததால் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அருள்முருகன், இதுதொடர்பான உத்தரவை நாளை (அதாவது நேற்று) பிற்பகல் 3 மணிக்கு அறிவிப்பதாக கூறினார்.

10 நாள் காவல்

இதையடுத்து பயங்கரவாதிகள் 2 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் பாளையங்கோட்டை ஜெயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நேற்று மதியம் 2.35 மணி அளவில் போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். நேற்றும் கோர்ட்டு வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மாவட்ட கூடுதல் சூப்பிரண்டு விஜயபாஸ்கர், உதவி சூப்பிரண்டு ஜவகர் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் பயங்கரவாதிகள் அப்துல் சமீம், தவுபீக் ஆகிய 2 பேரும் நீதிபதி அருள்முருகன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்கள் 2 பேரையும் 10 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அப்போது அப்துல் சமீம், தவுபிக் ஆகிய 2 பேரும் தாங்கள் வக்கீலை சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதற்கு அரசு குற்றவியல் வக்கீல் ஞானசேகர் ஆட்சேபனை தெரிவித்து, வக்கீலை சந்தித்து பேச அவர்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று நீதிபதியிடம் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி அருள்முருகன், வக்கீலை சந்திக்க அனுமதிக்க முடியாது என்றார். இதையடுத்து அப்துல் சமீம், தவுபீக் ஆகிய 2 பேரையும் போலீசார் பாதுகாப்புடன் விசாரணைக்காக ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.

உத்தரவு

இதுதொடர்பாக மாவட்ட அரசு குற்றவியல் வக்கீல் ஞானசேகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த வழக்கில் விசாரணைக்காக 28 நாட்கள் போலீஸ் காவலுக்கு அனுமதி கேட்டு அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

ஆனால் நீதிபதி 10 நாட்கள் போலீஸ் காவலில் கொடுப்பதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதைத்தவிர அவர்களை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல்களை தெரிவித்து அதன்படி நடத்த அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மருத்துவ சான்றுடன்

விசாரணை அதிகாரி கையில் அந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அவர், கைதான 2 பேரையும் கோர்ட்டு உத்தரவுப்படி விசாரணைக்காக 10 நாள் காவலுக்கு அழைத்துச் செல்வார். வருகிற 31-ந் தேதி அவர்கள் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும். போலீசாரின் விசாரணைக்கு மேலும் கால அவகாசம் தேவைப்படும் பட்சத்தில் மீண்டும் கோர்ட்டில் நாங்கள் விசாரணை அதிகாரி வேண்டுகோளின் அடிப்படையில் மேலும் காவல் நீட்டிப்பு பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

நீதிபதியின் உத்தரவில், போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்படும் இருவரையும் துன்புறுத்தவோ, தவறாக கையாளவோ, தூண்டவோ கூடாது என்றும், அவர்களுக்கு நல்ல உணவு, மருத்துவ வசதி மற்றும் ஓய்வு அளிக்க வேண்டும், கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்றும் இந்த உத்தரவில் தெரிவித்துள்ளார். வருகிற 31-ந் தேதி மாலை 4 மணிக்கு அவர்களை மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும். அவ்வாறு ஆஜர்படுத்தும்போது அவர்களை மருத்துவச் சான்றுடன் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் அதில் கூறியுள்ளார். இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான மாவட்ட குற்றப்பிரிவு துணை சூப்பிரண்டு கணேசனின் தனிப்பட்ட பொறுப்பில் விசாரணைக்காக 2 பேரும் ஒப்படைக்கப்படுகிறார்கள் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஞானசேகர் கூறினார்.

Next Story