அலகுமலையில் 2-ந் தேதி நடக்கும் ஜல்லிக்கட்டை கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும் கலெக்டர் அறிவுரை


அலகுமலையில் 2-ந் தேதி நடக்கும் ஜல்லிக்கட்டை கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும் கலெக்டர் அறிவுரை
x
தினத்தந்தி 21 Jan 2020 11:00 PM GMT (Updated: 21 Jan 2020 7:45 PM GMT)

அலகுமலையில் 2-ந் தேதி நடக்கும் ஜல்லிக்கட்டை கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும் என்று கலெக்டர் விஜயகார்த்திகேயன் அறிவுறுத்தினார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கத்தின் சார்பில் வருகிற 2-ந் தேதி அலகுமலை கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடக்கிறது. இந்த விழா தொடர்பான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமை தாங்கி பேசியதாவது:-

ஜல்லிக்கட்டில் பங்கேற்க உள்ள காளைகள் மற்றும் வீரர்கள் குறித்த விவரங்களை அமைப்பாளர்கள், முன்னரே தெரிவித்து முன் அனுமதி பெற வேண்டும். பங்கேற்பாளர்கள் குறித்த விவரங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.

குழுவினர் ஆய்வு

விழாக்குழுவினர் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை விழா நடைபெறுவதற்கு முன்பு குறைந்தபட்சம் 24 மணி நேரத்துக்கு முன்பாக பூர்த்தி செய்யும்பட்சத்திலேயே ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்படும்.

ஜல்லிக்கட்டு விதிகளின்படி நடைபெறுகிறதா? என்பதை உறுதி செய்ய வசதியாக மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்படும் வருவாய்த்துறை, கால்நடைத்துறை, காவல்துறை மற்றும் பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்வார்கள். இந்த குழுவுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

ஊக்கமருந்து

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு ஊக்கமருந்தோ, எரிச்சல் அளிக்கக்கூடிய பொருட்களையோ செலுத்தக்கூடாது. ஜல்லிக்கட்டு விழாவை திறந்தவெளியில் நடத்த வேண்டும். காளைகளை வெயில், மழையில் இருந்து காக்கும் வகையில் சாமியானா பந்தல் அமைக்க வேண்டும்.

காளைகளை நுழைவுப்பகுதிக்கு அழைத்து வந்த பின்பே அதன் உரிமையாளர் மூக்கணாங்கயிற்றை அவிழ்த்து காளையை திடலில் அனுமதிக்க வேண்டும். மாடுபிடி வீரர்கள் வாடிவாசல் முகப்பில் நிற்கவோ, காளைகள் திடலில் இருந்து வெளியேறும் பகுதியில் இடைமறித்து நிற்கவோ அனுதிக்கக்கூடாது. வீரர்கள் காளைகளின் திமிலை தழுவியபடி 15 மீட்டர் தூரத்துக்கு செல்வதற்கும் அல்லது 30 விநாடிகள் தழுவியபடி செல்வதற்கும், காளைகளின் மூன்று துள்ளல்களை கட்டுப்படுத்தி தழுவியபடி செல்வதற்கும் அனுமதிக்க வேண்டும்.

தேங்காய் நார்

காளைகளின் வால், கொம்புகளை பிடிக்கக்கூடாது. காளைகளின் கால்களை பிடித்துக்கொண்டு காளைகள் முன்செல்வதை தடுக்கக்கூடாது. 15 மீட்டர் பரப்பளவு தளம் முழுவதும் வீரர்களுக்கும், காளைகளுக்கும் காயம் ஏற்படாதவாறு தேங்காய் நார் பரப்ப வேண்டும். காளைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடம், காளை சேகரிப்பு மையம் மற்றும் தேவைப்படும் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி நிகழ்ச்சிகளை கண்காணிக்க வேண்டும்.

கடந்த ஆண்டு 550 காளைகள் பங்கேற்றுள்ளன. இந்த ஆண்டு திருப்பூர், கோவை,ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த காளைகளுக்கு முன்னுரிமை கொடுத்து பதிவு செய்ய வேண்டும்.

இரட்டை தடுப்பாண்கள்

பார்வையாளர்கள் அரங்கத்தை பிரிக்கும் வகையில் இரட்டை தடுப்பாண்கள் அமைக்க வேண்டும். பார்வையாளர் பகுதி காளைகள் திடல், வாடிவாசல் நுழையும் பகுதியில் இருந்து 15 மீட்டர் தூரத்துக்கு அப்பால் அமைக்க வேண்டும். காளைகள் பார்வையாளர்கள் பகுதிக்குள் புகுந்து தாக்குவதை கட்டுப்படுத்தும் வகையில் திடலின் இருபுறமும் 8 அடி உயரத்தில் இரட்டை தடுப்பாண்கள் அமைக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

வருவாய்த்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை, தீயணைப்புத்துறை, பொதுப்பணித்துறை, மருத்துவத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வட்டார போக்குவரத்து துறையினர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

போலீஸ் சூப்பிரண்டு

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல், மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ரூபன்சங்கர்ராஜ், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், துணை போலீஸ் சூப்பிரண்டு(பல்லடம்) முருகவேல், உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) பாலசுப்பிரமணியன், திருப்பூர் ஆர்.டி.ஓ. கவிதா, கால்நடைபராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் ரகுநாதன், பொங்கலூர் ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் சிவாசலம், ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்க தலைவர் பழனிசாமி, அலகுமலை ஜல்லிக்கட்டுகாளைகள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story