வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி டிராவல்ஸ் உரிமையாளர் கைது


வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி டிராவல்ஸ் உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 21 Jan 2020 11:00 PM GMT (Updated: 21 Jan 2020 8:14 PM GMT)

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி செய்த டிராவல்ஸ் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

கோவை,

கோவையை அடுத்த சின்னவேடம்பட்டி உடையாம்பாளையத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 27). இவர் கோவை காட்டூர் விவேகானந்தா சாலையில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவர், போலந்து நாட்டில் அதிக சம்பளத்துடன் வேலை வாங்கி தரப்படும் என்று ஆன்லைனில் விளம்பரம் செய்தார்.

அதை நம்பி கோவை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பட்டதாரி வாலிபர்கள் போலந்து நாட்டிற்கு வேலைக்கு செல்ல விண்ணப்பித்தனர். அவர்களிடம் தலா ரூ.3 லட்சம் கட்ட வேண்டும் என்று மோகன்ராஜ் கூறி உள்ளார்.

ரூ.30 லட்சம் செலுத்தினர்

அதில் 10 பேர் சேர்ந்து ரூ.30 லட்சம் செலுத்தினார்கள். அவர்களிடம், விரைவில் வேலை வாங்கி தருவதாக கூறி பாஸ்போர்ட், சான்றிதழ்களை மோகன்ராஜ் வாங்கினார். ஆனால் அவர்களுக்கு வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் பணம் செலுத்திய 10 பேரும் அந்த நிறுவனத்துக்கு சென்று தங்கள் பணத்தை திரும்ப தரும்படி கேட்டனர்.

அதற்கு மோகன்ராஜ், விரைவில் போலந்து நாட்டிற்கு அனுப்பி வைக்கிறேன். ஓரிரு நாட்களில் விசா மற்றும் விமான டிக்கெட் வந்து விடும். ஒருவாரம் கழித்து வாருங்கள் என்று கூறியுள்ளார். அதை நம்பிய அவர்கள் அனைவரும் திரும்பி சென்றனர்.

வேலை வாங்கி கொடுக்காமல் மோசடி

இதையடுத்து ஒருவாரம் கழித்து அவர்கள் 10 பேரும் சென்று பார்த்த போது அந்த நிறுவனம் மூடப்பட்டு இருந்தது. அது பற்றி அக்கம் பக்கத்தில் விசாரித்த போது மோகன்ராஜ், தான் நடத்தி வந்த டிராவல்ஸ் நிறுவனத்தை மூடிவிட்டு வேறு இடத்துக்கு மாறியது தெரியவந்தது.

உடனே அவர்கள் மோகன்ராஜ் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த 10 பேரும் காட்டூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், 10 பேரிடம் இருந்து வேலை வாங்கி தருவதாக கூறி மோகன்ராஜ் ரூ.30 லட்சம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது.

சிறையில் அடைப்பு

இதையடுத்து போலீசார் மோகன்ராஜை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல மோகன்ராஜிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என்றும் போலீசார் அறிவித்து உள்ளனர்.


Next Story