மேல்மலையனூர் கோவிலில் அமாவாசை விழா: பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் - கலெக்டர் தலைமையில் நடந்தது


மேல்மலையனூர் கோவிலில் அமாவாசை விழா: பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் - கலெக்டர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 21 Jan 2020 11:13 PM GMT (Updated: 21 Jan 2020 11:13 PM GMT)

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.

விழுப்புரம்,

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை விழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. விழாவை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்வது குறித்த முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு செஞ்சி பேரூராட்சி மூலம் குடிநீர் வசதி ஏற்படுத்தித்தர வேண்டும். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் மூலம் தற்காலிக பஸ் நிலையங்கள், தற்காலிக கழிவறைகள் ஏற்படுத்தித்தர வேண்டும். போக்குவரத்துத்துறை மூலம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட வேண்டும். பஸ்கள் ஒரே இடத்தில் நிறுத்துவதை காவல்துறை, இந்து சமய அறநிலையத்துறை, போக்குவரத்துத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து உறுதி செய்துகொள்ள வேண்டும்.

முழு சுகாதார திட்டத்தின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் கழிவறை, குளியல் அறை ஏற்படுத்திட வேண்டும். மின்வாரியத்தின் மூலம் திருவிழா நாட்களில் தேவையான மின் பணியாளர்கள் பணியில் இருக்கவும், அவ்வப்போது ஏற்படும் மின் தடைகளை சரிசெய்யவும், விழாக்காலங்ளில் 2 நாட்களிலும் மும்முனை இணைப்பு மூலம் மின்சாரம் வழங்க வேண்டும்.

மேலும் இந்து சமய அறநிலையத்துறை மூலம் கோவிலின் பாதுகாப்பு கருதி பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கோவில் அலுவலகம், புறக்காவல் நிலையங்களில் சி.சி.டி.வி. மூலம் கண்காணிக்க வேண்டும். சுகாதாரத்துறை மூலம் மருத்துவக்குழு மற்றும் ஆம்புலன்ஸ்கள், கோவில் வளாகத்தில் தயார் நிலையில் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், திண்டிவனம் சப்-கலெக்டர் அனு மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story