சங்கரன்கோவில் அருகே, மின்சாரம் தாக்கி பெண் சாவு - மாட்டுக்கு புல் அறுக்கச் சென்றபோது பரிதாபம்


சங்கரன்கோவில் அருகே, மின்சாரம் தாக்கி பெண் சாவு - மாட்டுக்கு புல் அறுக்கச் சென்றபோது பரிதாபம்
x
தினத்தந்தி 22 Jan 2020 10:30 PM GMT (Updated: 22 Jan 2020 2:17 PM GMT)

சங்கரன்கோவில் அருகே மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக இறந்தார். மாட்டுக்கு புல் அறுக்கச் சென்றபோது இச்சம்பவம் நிகழ்ந்தது.

சங்கரன்கோவில்,

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நவநீதகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி மனைவி சண்முகத்தாய் (வயது 55). வேலுச்சாமி குடும்பத்தினர் விவசாயம் செய்து வந்ததுடன் மாடுகளும் வளர்த்து வந்துள்ளனர். மாடுகளுக்கு புல் அறுப்பதற்காக சண்முகத்தாய் நேற்று காலை ஊரின் அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்று உள்ளார்.

அப்போது தோட்டத்தில் மின் ஒயர் அறுந்து கிடந்துள்ளது. அதனை கவனிக்காத சண்முகத்தாய், மின்ஒயர் மீது மிதித்துள்ளார். இதனால் மின்சாரம் தாக்கியதில் சண்முகத்தாய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் சின்னக்கோவிலான்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சண்முகத்தாய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சின்னக்கோவிலான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி இறந்த சண்முகத்தாய்க்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மாட்டுக்கு புல் அறுக்கச் சென்றபோது நிகழ்ந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story