ஜேடர்பாளையம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; விவசாயி பலி 2 பேர் படுகாயம்


ஜேடர்பாளையம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; விவசாயி பலி 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 22 Jan 2020 10:15 PM GMT (Updated: 22 Jan 2020 9:54 PM GMT)

ஜேடர்பாளையம் அருகே மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் விவசாயி பலியானார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

பரமத்திவேலூர்,

ஜேடர்பாளையம் அருகே பெருங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 67). விவசாயி. இவர் நேற்று மோட்டார்சைக்கிளில் சோழசிராமணிக்கு சென்று விட்டு மீண்டும் பெருங்குறிச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது திருச்செங்கோடு அருகே பன்னிகுத்திபாளையத்தை சேர்ந்த ரிக் தொழிலாளி சாமுவேல் (25), தனியார் பஸ் டிரைவர் தனசேகர் (45) ஆகியோர் ஒரே மோட்டார்சைக்கிளில் பெருங்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

சத்திபாளையம் என்ற இடத்தில் வந்தபோது 2 மோட்டார்சைக்கிள்களும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன. இதில் தூக்கி வீசப்பட்டு 3 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதையடுத்து அந்த வழியாக வந்தவர்கள் அவர்களை மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே விவசாயி துரைசாமி பரிதாபமாக இறந்தார்.

விசாரணை

பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சாமுவேல், தனசேகருக்கு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் இருவரும் மேல்சிகிச்சைக்காக அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story