நகராட்சி, பேரூராட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறுவோம் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு


நகராட்சி, பேரூராட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறுவோம் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு
x
தினத்தந்தி 23 Jan 2020 11:00 PM GMT (Updated: 23 Jan 2020 8:36 PM GMT)

நகராட்சி, பேரூராட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறுவோம் என அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

கரூர்,

கரூர் தெற்கு நகர அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தாந்தோணிமலை பழைய நகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு நகர செயலாளர் வி.சி.கே.ஜெயராஜ் தலைமை தாங்கினார். நகர அவைத்தலைவர் இளங்கோவன் வரவேற்று பேசினார். மத்திய நகர செயலாளர் நெடுஞ்செழியன், மாவட்ட துணை செயலாளர் சிவசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர்கள் நெத்தியடி நாகையன், கிருபானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

8 ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க ஆட்சியில் 12 மணி நேரம் மின் வெட்டு இருந்தது. தமிழகத்தில் இன்றைக்கு ஆயிரத்து நூறு மெகாவாட் மின் உற்பத்தி அதிகமாக உள்ளது. எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் 200 யூனிட் விலையில்லா மின்சாரம் கொடுத்தது தமிழக அரசுதான். விரிவுபடுத்தப்பட்ட காப்பீடு திட்டம் ஜெயலலிதாவால் தமிழகத்தில் கொண்டு வரப்பட்டது. தற்போது பிரதமர் இந்தியாவில் 50 கோடி பேருக்கு மருத்துவ காப்பீடு திட்டம் கொடுக்கப்படும் என கூறுகிறார். தமிழகம் இந்தியாவிற்கே முன் உதாரணமாக திட்டத்தை கொடுத்த மாநிலம் என்பதை மக்கள் எண்ணி பார்க்க வேண்டும். மேலும் கல்வி துறையில் புரட்சி செய்து இருக்கிறோம்.

ஹைட்ரோ கார்பன் திட்டம்

இந்திய துணை கண்டத்தில் ஊழலுக்காக ஒரு அரசு கலைக்கப்பட்டது என்று சொன்னால் அது தி.மு.க. தான் என்பதை நினைத்து பார்க்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டம் வரக்கூடாது என மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் அத்திட்டத்திற்கு அனுமதி அளித்தது காங்கிரஸ் தலைமையிலான அரசு தான். அப்போது கூட்டணியில் இருந்தது தி.மு.க தான். அதேபோல்தான நீட் தேர்வும் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.

தமிழகத்தில் காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு, இலங்கை தமிழர் பிரச்சினை, கச்சத்தீவு உள்ளிட்ட எந்த பிரச்சினையாக இருந்தாலும் மாநிலத்தின் உரிமைக்கு குரல் கொடுப்பது அ.தி.மு.க. தான். நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறோம். கூட்டுறவு தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெற்று உள்ளோம். மேலும் நகராட்சி, பேரூராட்சி தேர்தலிலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி தலைவர் வி.சி.கே.பாலகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் தானேஷ் என்கிற முத்துக்குமார், ஊராட்சிக்குழு உறுப்பினர் திருவிகா உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல கரூர் வடக்கு நகர அ.தி.மு.க. சார்பில் வெங்கமேட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு வடக்கு நகரசெயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முன்னாள் நகர்மன்ற தலைவர் செல்வராஜ், மலையம்மன் நடராஜன், இனாம் கரூர் செல்வராஜ், வேங்கை ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story