பல்லடம் அருகே, தண்ணீர் வாளியில் மூழ்கி குழந்தை சாவு


பல்லடம் அருகே, தண்ணீர் வாளியில் மூழ்கி குழந்தை சாவு
x
தினத்தந்தி 23 Jan 2020 11:00 PM GMT (Updated: 23 Jan 2020 11:50 PM GMT)

பல்லடத்தில் அருகே தண்ணீர் வாளியில் குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பல்லடம், 

பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். பல்லடம் மின் வாரியத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி மோகனா. இவர்களுக்கு ஜெகத் என்ற 1½ வயது ஆண் குழந்தை இருந்தது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகை கொண்டாட தம்பதி இருவரும் குழந்தை ஜெகத்துடன் செட்டிபாளையம் ரோடு பாலாஜி நகரில் உள்ள மோகனாவின் தந்தை சுப்பிரமணியன் வீட்டிற்கு கடந்த 15-ந் தேதி சென்றனர். பொங்கல் முடிந்த பின் பிரபாகரன் மட்டும் வேலைக்கு சென்றுவிட்டு மாமனார் வீட்டிற்கு வந்துவிடுவார். இந்த நிலையில் நேற்று வீட்டில் மோகனா மற்றும் அவரது தாயார் கோகிலா ஆகியோர் மட்டும் இருந்துள்ளனர்.

பின்னர் மதியம் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிவிட்டு தொட்டிலில் தூங்க வைத்துவிட்டு மோகனா துணிகள் துவைக்க மாடிக்கு சென்றுள்ளார். பாட்டி கோகிலா வீட்டில் இருந்துள்ளார். துணி துவைக்க சென்ற மோகனா சோப்பு பவுடர் இல்லாததால் தனது தாயை அருகிலுள்ளகடைக்குச் சென்று வாங்கி வரச் சொல்லியுள்ளார். இதையடுத்து கோகிலாவும் சோப்பு பவுடர் வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார்.

பின்னர் சோப்பு பவுடர் வாங்கிவிட்டு வீட்டிற்குள் கோகிலா வந்த போது குழந்தையைக் காணவில்லை. இதனால் சந்தேகமடைந்து அருகிலிருந்த குளியறைக்கு சென்று பார்த்தபோது தண்ணீர் இருந்த வாளியில் குழந்தை தலைகுப்புற கிடந்தது. இதனால் கோகிலாவும், மோகனாவும் அலறியடித்து குழந்தையை தூக்கிக்கொண்டு பல்லடத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது போலீசார் குழந்தையின் உடலை பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கோகிலா கடைக்கு சென்ற நேரத்தில் தூக்கம் கலைந்து எழுந்த குழந்தை தொட்டிலை விட்டு இறங்கி உள்ளது. பின்னர் அருகில் மூடப்படாமல் இருந்த பாத்ரூமிற்குள் சென்று அங்கிருந்த பிளாஸ்டிக் வாளியில் இருந்த தண்ணீரில் கை விட்டு விளையாடி உள்ளது. அப்போது தலைக்குப்புற பிளாஸ்டிக் வாளியில் உள்ளே விழுந்த குழந்தை அப்படியே மூச்சு திணறி இறந்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். 

Next Story