காதலுக்கு தூது சென்ற சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோவில் கைது தாராபுரம் அருகே சம்பவம்


காதலுக்கு தூது சென்ற சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோவில் கைது தாராபுரம் அருகே சம்பவம்
x
தினத்தந்தி 25 Jan 2020 12:05 AM GMT (Updated: 25 Jan 2020 12:05 AM GMT)

தாராபுரம் அருகே காதலுக்கு தூது சென்ற சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டான்.

தாராபுரம்,

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள குண்டடம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளிக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார். பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, தற்போது வீட்டில் இருந்து வந்தார். இவரது வீட்டிற்கு அருகே இவரது உறவினரின் 17 வயது சிறுவன் இருந்துள்ளான்.

இந்த நிலையில் சிறுவனுக்கு வேறொரு பெண்ணின் மீது காதல் ஏற்பட்டுள்ளது. தனது காதலை வெளிப்படுத்துவதற்காக அடிக்கடி சிறுமியை பயன்படுத்தி காதலிக்கு தூது அனுப்பி வந்துள்ளார்.

அதன்பின்னர் சிறுவனுக்கு சிறுமியின் மீது ஆசை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது, சிறுவன் அங்கு சென்றுள்ளான். பிறகு சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதை. பெற்றோரிடம் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் சிறுமியை மிரட்டியுள்ளார். இதனால் சிறுமி கர்ப்பம் அடைந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சிறுமியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டதை கண்ட பெற்றோர் அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள். சிறுமி 6 மாதம் கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் மகளிடம் கர்ப்பத்துக்கு யார் காரணம்? என்று கேட்டனர். அதற்கு அந்த சிறுமி கண்ணீருடன் நடந்ததை கூறி உள்ளார்.

இதையடுத்து தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் சிறுவன் மீது புகார் அளித்தனர். அதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story